கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் அனைத்து விதமான வர்த்தகம், போக்குவரத்து நீண்ட காலம் முடங்கிய நிலையிலும், 2020ல் இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்தின் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை 2019ஆம் ஆண்டை விடவும் கிட்டதட்ட 100 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் லாக்டவுன் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வந்த நிலையிலும், இந்தியாவில் விலை குறையாமல் தொடர்ந்து உயர்வான விலையில் இருந்த காரணத்தால் இந்த வருடம் பெட்ரோல், டீசல் விற்பனை நிறுவனங்கள் சிறப்பான லாபத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விற்பனை
2020ஆம் ஆண்டில் இந்தியாவில் பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே முடங்கி இருந்தாலும், 2019ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்தின் பெட்ரோல் விற்பனை 108 சதவீதமும், டீசல் விற்பனை 96 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது என இந்நிறுவனத்தின் மார்கெட்டிங் பிரிவின் தலைவரான குர்மீத் சிங் தெரிவித்துள்ளார்.
2020ல் பெட்ரோல், டீசல் விற்பனையில் ஏற்பட்டுள்ள உயர்வு நாட்டின் வளர்ச்சியை உணர்த்துகிறது எனப் புவனேஷ்வரில் நடத்த முக்கியமான கூட்டத்தில் குர்மீத் சிங் இதைத் தெரிவித்துள்ளார்.
தர்மேந்திர பிரதான்
மத்திய பெட்ரோலியம் துறை அமைச்சரான தர்மேந்திர பிரதான் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் பேசிய இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்தின் தலைவரான எஸ்எம் வைத்தியா, 2020ல் மக்கள் அதிகமாக வீட்டிலேயே இருந்த காரணத்தால் நாட்டு மக்கள் மத்தியில் எல்பிஜி-யின் தேவை அதிகரித்துள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும் 2019ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் எல்பிஐ தேவை மற்றும் அதன் விற்பனை 2020ல் 10 சதவீதம் அதிகரித்துள்ளது என வைத்தியா தெரிவித்துள்ளார்.
ஆக்டேன் நிறைந்த பெட்ரோல்
இந்தக் கூட்டத்தில் மத்திய பெட்ரோலியம் துறை அமைச்சரான தர்மேந்திர பிரதான் பன்னாட்டுப் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு இணையான தரத்தில் ஆக்டேன் நிறைந்த பெட்ரோல்-ஐ இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்தின் அஸ்சாம் டிகபோய்ச் சுத்திகரிப்புத் தளத்தில் இருந்து சுமார் 7 நகரங்களுக்கு விநியோகம் செய்யும் திட்டத்தைத் துவங்கி வைத்தார்.
இதேபோல் இக்கூட்டத்தில் தர்மேந்திர பிரதான் மிஸ்டு கால் மூலம் சமையல் எரிவாயுவை புக் செய்யும் சேவையைத் துவக்கி வைத்தார்.
எல்பிஜி இணைப்புகள்
2020ல் எல்பிஜி விற்பனை 10 சதவீதம் அதிகரித்துள்ளதைப் போல் இந்த வருடம் நாட்டின் மொத்த எல்பிஜி இணைப்புகளின் எண்ணிக்கை சுமார் 30 கோடியாக உயர்ந்துள்ளது என மத்திய பெட்ரோலியம் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.
மேலும் கடந்த 6 வருடத்தில் இதன் எண்ணிக்கை 17 கோடி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.