பெட்ரொல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்கள் மட்டும் தான் இன்னும் சரக்கு மற்றும் சேவை வரிகளுக்குள் வராமல் இருக்கின்றன.
எனவே இந்த பொருட்கள் மீது, இப்போது வரை மத்திய மற்றும் மாநில அரசுகள் கலால் வரி முதல் வாட் வரி வரை பல வரிகளை விதித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இதோடு மற்ற சில கூடுதல் வரிகளையும் மத்திய அரசு விதித்து வசூலித்துக் கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் ஒன்று தான் இந்த சிறப்பு கூடுதல் கலால் வரி.
சமீபத்தைய உயர்வு
கடந்த மார்ச் 14, 2020 அன்று தான் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை 3 ரூபாய் உயர்த்தியது மத்திய அரசு. ஆனால் இந்த முறை மத்திய அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரி வரம்பை (Special Additional Excise Duty Cap) உயர்த்தி இருக்கிறார்கள்.
பெட்ரோல்
இதுவரை ஒரு லிட்டர் பெட்ரோலில் மத்திய அரசு 10 ரூபாயை சிறப்பு கூடுதல் கலால் வரியாக விதிக்கலாம். இந்த வரம்பை, தற்போது 18 ரூபாயாக உயர்த்தி இருக்கிறார்கள். கொரோனா வைரஸ் பிரச்சனைக்கு மத்தியில், இந்த வரி வரம்பு உயர்வு, வாகன ஓட்டிகளுக்கு பேரிடியாக வந்து விழுந்து இருக்கிறது.
டீசல்
அதே போல, ஒரு லிட்டர் டீசலில் மத்திய அரசு 4 ரூபாயை சிறப்பு கூடுதல் கலால் வரியாக விதிக்கலாம். இந்த வரம்பை, தற்போது 12 ரூபாயாக உயர்த்தி இருக்கிறது மத்திய அரசு. பொதுவாக டீசல் விலை அதிகரித்தால், அது ஒட்டு மொத்த பொருளாதாரத்திலும் விலை ஏற்றத்தைக் கொண்டு வரும் என்பார்கள்.
என்ன பயன்
இந்த சிறப்பு கூடுதல் கலால் வரி வரம்பை (Special Additional Excise Duty Cap) அதிகரிப்பதால் நமக்கோ அல்லது அரசுக்கோ என்ன பயன் என்று கேட்கிறீர்களா..? இனி வரும் காலங்களில் மத்திய அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரியை அதிகரிக்க வேண்டும் என்றால் ஒரு லிட்டருக்கு 18 மற்றும் 12 ரூபாய் வரை அதிகரித்துக் கொள்ளலாம். அதற்கு தான் இன்றே வரம்புகளை அதிகரித்து இருக்கிறார்களாம்.