இந்தியாவில் கடந்த 2 மாதமாகப் பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது சாமானிய மக்களுக்கு மிகப்பெரிய சுமையாக மாறியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பெட்ரோல் விலை இன்னும் 1 ரூபாய் மட்டும் அதிகரித்தால் புதிய வரலாற்று உச்சத்தை அடையும் நிலைக்கு உயர்ந்துள்ளது.
2018ல் மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் அதிகப்படியாக 91.39 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது, இதேபோல் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் அதிகப்படியாக 84.06 ரூபாய் வரையில் அதிகரித்தது. இந்நிலையில் தற்போதைய விலை நிலவரத்தில் இருந்து இன்னும் ரூபாய் அதிகரித்தால் இந்தியாவில் பெட்ரோல் விலை புதிய உச்சத்தை அடைந்துவிடும்.
புதிய உச்சத்தை அடையும் பெட்ரோல்
டிசம்பர் 7ஆம் தேதி நிலவரப்படி மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 90.30 ரூபாய்க்கும், டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 83.71 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது 2018 விலை நிலவரத்தை ஒப்பிடுகையில் வெறும் 1 ரூபாய் மட்டுமே குறைவாக உள்ளது. இதேவேளையில் கடந்த 3 வாரக் காலத்தில் மட்டும் பெட்ரோல் விலை சுமார் 2.8 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் பெட்ரோல் விலை சுமார் 14 முறை உயர்த்தப்பட்டு உள்ளது.
மக்களுக்குப் பாதிப்பு அளவு குறைவு
2018க்கும் 2020க்கும் உள்ள பெரிய வித்தியாசம், தற்போது மக்கள் அதிகளவில் வீட்டில் இருந்து பணியாற்றி வரும் காரணத்தால் பெட்ரோல் விலை உயர்வின் மூலம் பெரிய அளவிலான பாதிப்பு மக்களுக்கு நேரடியாக இல்லை. ஆனால் மறைமுகமாகப் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் ஏற்படும் தினசரி பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை
2018ஆம் ஆண்டில் பல மாநிலங்களில் தேர்தல் நடக்க இருக்கும் தருவாயில் இந்த அதிகப்படியான பெட்ரோல், டீசல் விலை மக்களைக் கடுமையாகப் பாதித்தது, மக்கள் கோபம் அடைந்து சமுக வலைத்தளத்தில் பதிவுகளைப் பகிரத் துவங்கிய போது. அரசு அவசர கூட்டத்தைக் கூட்டி பெட்ரோல் விலையை மே 30ஆம் தேதி வெறும் 1 பைசா குறைத்தது. இது மக்களை மேலும் கோபம் அடையச் செய்தது.
கர்நாடகா மற்றும் பீகார் தேர்தல்
2018ல் கர்நாடக தேர்தல் காரணமாக மத்திய அரசு சுமார் 19 நாள் பெட்ரோல் டீசல் விலையை மாற்றாமல் வைத்திருந்தது. தற்போது 2020 பீகார் தேர்தல் எதிரொலியாகச் செப்டம்பர் 2 முதல் நவம்பர் 20 வரையில் விலையை மாற்றாமல் வைத்திருந்தது.
கச்சா எண்ணெய் இறக்குமதி
இந்தியா தனது பெட்ரோல் டீசல் தேவையில் 80 சதவீதத்தை வெளிநாட்டு இறக்குமதி மூலம் சரிசெய்து வருகிறது. அதிலும் முக்கியமாக ஈராக் மற்றும் அரபு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது.
போக்குவரத்துச் சுமை
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் நாம் சாப்பிடும் காய்கறி, உணவுப் பொருட்கள், பால் ஆகிய அனைத்து பொருட்களையும் பாதிக்கிறது. பொதுவாக நாடு முழுவதும் அனைத்து பொருட்களும் ஒர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்ல போக்குவரத்து மிகவும் கட்டாயமாக இருக்கும் போது பொருட்களின் விலையில் போக்குவரத்துச் செலவுகள் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.
இதனால் பொருட்களின் விலை உயர்ந்து நாட்டின் பணவீக்கம் அதிகரித்து வருகிறது.