ஈரான் போர் காரணமாக இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் சப்ளை குறைந்துவிட்டது. இதனால் உலக சந்தையில் அதிக விலை கொடுத்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு நேரடியாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தும்.
ஏற்கனவே ஷெல், நயாரா போன்ற தனியார் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தி விட்டன. ஆனால் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் , பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் ஆகியவை இதுவரை பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தவில்லை. பிரீமியம் பெட்ரோல் விலைகள் மட்டுமே உயர்த்தப்பட்டன. போருக்கு முன்பு என்ன அளவில் இருந்ததோ அதே அளவில் தான் பெட்ரோல், டீசல் விலை நீடிக்கிறது.

இவ்வாறு எரிபொருள் விலையை உயர்த்தாமல் விற்பனை செய்வதால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் விற்பனையிலும் 18 ரூபாயும் ஒவ்வொரு லிட்டர் டீசல் விற்பனையிலும் 35 ரூபாயும் நஷ்டம் ஏற்படுவதாக ஒரு அறிக்கை வெளியாகி இருக்கிறது. அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் ,ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடந்து 2022 ஏப்ரல் முதல் பெட்ரோல், டீசல் விற்பனை விலையை மாற்றாமலேயே வைத்துள்ளன.
போருக்கு முன் இந்தியாவிற்கு 90 ரூபாய்க்கு கிடைத்த ஒரு பேரல் கச்சா எண்ணெய் தற்போது 150 ரூபாய் என்ற அளவில் கிடைக்கிறது. இந்த நிலையில் மெக்வாரி எனும் சர்வதேச நிதி சேவை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் எண்ணெய் விற்பனை நிறுவனங்களின் வருவாய் நிலைமை மோசமாக உள்ளது என குறிப்பிட்டு இருக்கிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஏற்றதால் இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக இருப்பதாக சுட்டிக்காட்டி இருக்கிறது. இதன் விளைவாக பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு 18 ரூபாயும் டீசல் விற்பனையில் லிட்டருக்கு 35 ரூபாய் வரையும் இழப்பு ஏற்படுகிறது என தெரிவித்துள்ளது. இதனை வாடிக்கையாளர்கள் மீது சுமத்தினால் உண்மையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 119 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 127 ரூபாய்க்கும் தான் விற்கப்பட வேண்டும்.
கடந்த மாதம் கச்சா எண்ணெய் 100 டாலர்களை கடந்த போது எண்ணெய் நிறுவனங்கள் தினசரி 2400 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்தன என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மத்திய அரசு கலால் வரியை பெட்ரோல் மற்றும் டீசலுக்கு லிட்டருக்கு பத்து ரூபாய் என குறைத்ததால் இந்த நிறுவனங்களின் இழப்பு ஓரளவு ஈடு செய்யப்படுகிறது. ஜனவரி பிப்ரவரி மாதம் ஈட்டிய லாபங்கள் முழுவதும் மார்ச் மாதத்தில் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய செலவிடப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
எனவே இந்த காலாண்டில் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தையே பதிவு செய்யும் என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. கச்சா எண்ணெய் விலை ஒவ்வொரு பேரலுக்கும் பத்து ரூபாய் உயரும் போதும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு லிட்டர் விற்பனையிலும் 6 ரூபாயை இழக்கின்றன என அதில் கூறப்பட்டுள்ளது. மேற்குவங்கம், தமிழ்நாடு ஆகிய முக்கிய மாநிலங்களில் தற்போது தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் முடிந்த பிறகு இந்த மாத இறுதியில் இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை உயர்த்த வாய்ப்பு இருப்பதாக மெர்குவாரி அறிக்கை தெரிவித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications