சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயரும் காரணத்தால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் பல மாநிலங்களில் ஏற்கனவே பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டியிருக்கும் நிலையில் நாடு முழுவதும் சாதாரணப் பெட்ரோல் விலையே சராசரியாக 100 ரூபாயைத் தாண்டும் அளவிற்குக் கூடிய விரைவில் சூழ்நிலை உருவாக உள்ளது.
அமெரிக்காவின் முன்னணி 3 நிதி நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலை குறித்து வெளியிட்டுள்ள கணிப்புகள் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள்
கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் 2020ல் ஏற்பட்ட வர்த்தக பாதிப்பு மூலம் பெரிய அளவிலான வருவாய் மற்றும் வர்த்தகப் பாதிப்புகளை எதிர்கொண்டது. இதைச் சரிசெய்யும் விதமாகக் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்து அதன் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.
பெத்த லாபம்
இந்த நடவடிக்கை சிறப்பான லாபத்தை அளிக்கத் துவங்கியுள்ள நிலையில் அடுத்த சில மாதங்களுக்குக் கச்சா எண்ணெய் உற்பத்தியில் எவ்விதமான மாற்றம் இருக்காது எனத் திட்டவட்டமாகத் தெரியும் நிலையில் கச்சா எண்ணெய் விலை குறித்து அமெரிக்காவின் முன்னணி நிதி நிறுவனங்கள் முக்கியமான கணிப்பை வெளியிட்டுள்ளது.
3 முக்கிய வங்கிகள் கணிப்பு
கோல்மேன் சாச்சீஸ், மோர்கன் ஸ்டான்லி, பாங்க் ஆப் அமெரிக்கா ஆகிய 3 வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கணிப்பின் படி அடுத்த சில மாதத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 70 டாலர் அளவிற்கு உயர அதிகளவிலான வாய்ப்புகள் இருப்பதாகவும், வர்த்தகச் சந்தை மிகவும் மோசமாகும் பட்சத்தில் இது 75 டாலர் வரையிலும் உயரும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
கச்சா எண்ணெய் விலை நிலவரம்
தற்போது கச்சா எண்ணெய் சந்தையில் WTI கச்சா எண்ணெய் விலை 61.08 டாலருக்கும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 65.02 டாலருக்கும், OPEC கச்சா எண்ணெய் 62 டாலருக்கும், இந்தியன் பேஸ்கட் கச்சா எண்ணெய் விலை 62 டாலருக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை தொடர்ந்து உயரப் பல முக்கியக் காரணங்கள் உள்ளது.
கச்சா எண்ணெய் தேவை
கொரோனா தொற்று மூலம் இன்னும் பல நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்தாலும், பல நாடுகள் வேகமாக வளர்ச்சி அடையத் துவங்கியுள்ளது. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்துள்ள தற்போதைய சூழ்நிலையில் அமெரிக்காவில் பல முக்கியமான பகுதிகளில் டீப் ப்ரீஸ் நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது.
டீப் ப்ரீஸ் நிலை
அமெரிக்கக் கச்சா எண்ணெய் வர்த்தகச் சந்தை இந்த டீப் ப்ரீஸ் நிலையில் இருந்து மீண்டு வர சந்தைக்குச் சில மாதங்கள் ஆகும் என்பதால் அமெரிக்காவின் உற்பத்தி, சந்தையில் குறைந்துள்ளது. இதனாலேயே தற்போது சந்தையின் டிமாண்ட் அடிப்படையில் பிரெண்ட் கச்சா விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் 65.50 டாலர் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது. இதே நிலை தான் பிற நாடுகளின் உற்பத்திக்கும் ஏற்படும்.
70 டாலர் விலை
இந்நிலையில் இந்தியா தற்போது வாங்கும் கச்சா எண்ணெய் விலை 62 டாலருக்கு விற்பனை செய்யப்படும் நிலையில், 70 டாலருக்கு உயர்ந்தால் சாதாரணப் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.75 ரூபாயும், டீசல் 3 ரூபாய் வரையில் உயரும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இது டெல்லி விற்பனை சந்தையை அடிப்படையாகக் கொண்ட விலை என்பதால் நாட்டின் பிற மாநிலங்களில் வாட் வரி விதிப்பின் படி இதன் விலை மேலும் அதிகரிக்கும்.
ஒரு டாலர் உயர்வில் ஏற்படும் மாற்றம்
கச்சா எண்ணெய் விலை ஏற்படும் ஒரு டாலர் விலை உயர்வுக்குச் சராசரியாகப் பெட்ரோல் விலை 55 பைசாவும், டீசல் 58 முதல் 60 பைசா வரையில் டெல்லி சந்தையில் உயர்கிறது. இதன் அளவீடு நாட்டின் பிற பகுதிகளில் இன்னும் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் கச்சா எண்ணெய் விலை
இன்றைய நிலையில் இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் விலை, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையை விடவும் 3 டாலர் குறைவாக இருக்கும் நிலையில், கச்சா எண்ணெய் விலை 70 டாலர் வரையில் உயரும் போது இந்தியாவில் தற்போது அளவீட்டை விடவும் 5 டாலர் வரையில் கச்சா எண்ணெய் விலை உயரும்.
100 ரூபாயைத் தாண்டும் பெட்ரோல்
இந்தத் திடீர் விலை உயர்வின் மூலம் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாய் என்ற உயரத்தை அடையும், இதனால் பிற மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாய் சர்வ சாதாரணமாக உயரும் என்பதே நிதர்சனமான உண்மை.
மத்திய மாநில அரசுகள்
மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியைக் குறைக்க மத்திய அரசு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இந்தியாவில் 5 மாநிலங்களின் அரசுகள் எரிபொருள் மீதான வரியைக் குறைத்துள்ளது. தமிழ்நாடு அரசு செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையில் வரிக் குறைப்பை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.