ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தம் குறித்த உலக நாடுகளின் பேச்சுவார்த்தை அடுத்த 10 நாட்களுக்கு ஒத்திவைத்துள்ள நிலையில், அந்நாட்டில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இந்தச் சூழ்நிலையில் ஈரான் நாட்டின் கச்சா எண்ணெய் வர்த்தகச் சந்தைக்கு வருவது தாமதமாகியுள்ளது.
இதனால் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்து வருகிறது, இதன் வாயிலாக இந்தியாவிலும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை 22 பைசா முதல் 28 பைசா வரையில் இன்று உயர்த்தியுள்ளது.
ஆனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை இதன் மீது விதிக்கப்படும் வரியை ஒன்றிய அரசு, மாநில அரசுகள் குறைப்பதன் மூலம் எளிதாகக் குறைக்க முடியும். ஆனால் அதைச் செய்ய மறுக்கிறது. ஏன் தெரியுமா..?!
வரி மேல் வரி
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு ஒன்றிய அரசு தனது பங்கிற்குக் கலால் வரியும், மாநில அரசு தனது பங்கிற்கு மதிப்புக் கூட்டு வரி (VAT) விதித்து வருகிறது. இதன் படி ஒரு லிட்டர் விலை 100 ரூபாய் என்றால் பெட்ரோலுக்கு 58 சதவீதமும், டீசலுக்கு 52 சதவீதம் வரியாகவும் செலுத்த வேண்டியுள்ளது.
ஒன்றிய அரசுக்கு வருமானம்
இந்த 58 ரூபாயில் ஒன்றிய அரசுக்கு 32 முதல் 33 ரூபாய் வரியாக வருமானத்தைப் பெற்று வருகிறது. இந்த வருமானம் அரசுக்கு மிகவும் முக்கியமானதாக விளங்குவது மட்டும் அல்லாமல் அதை ஒருபோதும் இழக்கக் கூடாது என்ற நோக்கத்தில் உள்ளது.
காங்கிரஸ் ஆட்சி
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 2010-11 மற்றும் 2013-14ஆம் நிதியாண்டில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலரைக் கடந்து போதும் இந்தியாவில் பெட்ரோல் விலை 90 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சி வசூலித்த கலால் வரி ஒரு லிட்டருக்கு 10 ரூபாய் மட்டுமே.
கச்சா எண்ணெய் விலை
தற்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 74 டாலருக்கு விற்பனை செய்யும் போதே பெட்ரோல் விலை 100 ரூபாய் அளவீட்டைப் பல மாநிலங்களில் கடந்துள்ளது.
மோடி அரசு
நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை உயர்த்தி வருமானத்தைப் பெற முடியாத மோடி தலைமையிலான ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் எரிபொருள் மீதான வரியைக் குறைக்காமல் தொடர்ந்து சாமானிய மக்களிடம் இருக்கும் பணத்தை வரியாகப் பெற்று வருகிறது.
வரி வருமானம் 62% வளர்ச்சி
பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு 2019-20ஆம் நிதியாண்டில் கலால் வரியாகச் சுமார் 2.39 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்றது.
இது 2020-21ஆம் நிதியாண்டில் 62 சதவீதம் உயர்ந்து 3.89 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்தக் கலால் வரியில் பெரும் பகுதி எரிபொருள் மீது விதிக்கப்படும் வரி மற்றும் செஸ் தான்.
பெட்ரோல், டீசல் கொள்முதல்
இதில் என்ன காமெடி என்றால், 2019-20ஆம் நிதியாண்டை ஒப்பிடுகையில் 2020-21ஆம் நிதியாண்டில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் கொள்முதல் அளவு சுமார் 9 சதவீதம் குறைந்துள்ளது. ஆனாலும் வரி வருமானம் 62 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது, இதற்கு முக்கியக் காரணம் ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தியது தான்.
1 ரூபாய்
உதாரணமாகப் பெட்ரோல், டீசல் விலை 1 ரூபாய் உயர்த்துவதன் மூலம் ஒன்றிய அரசுக்கு 13,000 முதல் 14,000 கோடி ரூபாய் அளவிலான வரி வருமானத்தைப் பெறுகிறது. இதே கதை தான் மாநில அரசும்.
மாநில அரசின் மதிப்புக் கூட்டு வரி
எரிபொருள் மற்றும் மதுபானம் மீது விதிக்கப்படும் மதிப்புக் கூட்டு வரியின் மூலம் மாநில அரசுகள் 25 முதல் 30 சதவீதம் வரையிலான வருமானத்தைப் பெறுகிறது. இதனால் மாநில அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க மனமில்லாமல் உள்ளது.