கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் அரபு நாடுகளின் அமைப்பான OPEC சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையை உயர்த்த வேண்டும் எனத் திட்டமிட்டு தினமும் சுமார் 1 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க முடிவு செய்துள்ளது. இதனால் சந்தையில் கச்சா எண்ணெய் இருப்பு அளவு குறைந்து விலை அதிகரிக்கும்.
இதன் காரணமாக இந்தியாவில் 29 நாட்களாகப் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் இருந்து கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் நேற்று புதிய விலை உயர்வை அறிவித்தது.
இதன் எதிரொலியாக இன்று பெட்ரோல் விலை டெல்லியில் வரலாறு காணாத உச்ச விலையை அடைந்துள்ளது.
கச்சா எண்ணெய் சந்தை
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இந்தியச் சந்தையை அதிகமாகப் பாதித்துள்ளது. குறிப்பாக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் இந்தியப் பொருளாதாரம் மற்றும் வர்த்தக சந்தைக்கு இந்தப் பெட்ரோல் விலை உயர்வு பெரும் சுமையாக இருக்கும்.
விலைவாசி உயர்வு
தற்போது ஏற்பட்டுள்ள விலை உயர்வு மக்கள் தினசரி பயன்படுத்தும் அனைத்து விதமான பொருட்களின் விலையை உயர்த்த அதிகளவிலான வாய்ப்புகள் உண்டு. முக்கியமாகக் காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள், தினசரி போக்குவரத்துச் செலவுகள் எனப் போக்குவரத்தை நம்பியிருக்கும் அனைத்து பொருட்களின் விலையும் உயரும்.
பெட்ரோல் விலை உயர்வு
டெல்லியில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 23 பைசா அதிகரித்துள்ள காரணத்தால் தனது முந்தைய உச்ச அளவான 84 ரூபாய் அளவை தாண்டி இன்று 84.20 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. இதேபோல் டீசல் விலை 26 பைசா உயர்ந்து ஒரு லிட்டர் 74.38 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
பிற நகரங்களில் பெட்ரோல் விலை
டெல்லியைத் தொடர்ந்து மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 90.83 ரூபாய்க்கும், டீசல் 81.07 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் சென்னையில் பெட்ரோல் 86.96 ரூபாய்க்கும், டீசல் 79.72 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் பெட்ரோல் 85.68 ரூபாய்க்கும், டீசல் 77.97 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை விலை நிலவரம்
சென்னையில் ஜனவரி 5ஆம் தேதி வரையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 86.51 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், 6ஆம் தேதி 86.75 ரூபாய்க்கும், ஜனவரி 7ஆம் தேதி 86.96 ரூபாய்க்கும் உயர்ந்துள்ளது. இதன் மூலம் கடந்த 2 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை சுமார் 45 பைசா உயர்ந்துள்ளது.
கலால் வரி
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விற்பனை மூலம் அதிகளவிலான வரி வருமானத்தைப் பெறத் திட்டமிட்டு மார்ச் 2020 மற்றும் மே 2020 கலால் வரியை அதிகளவில் உயர்த்தியது. இதில் 13 ரூபாய் பெட்ரோல் மீதும், 15 ரூபாய் டீசல் மீதும்
விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல், டீசல் பயன்பாடு இந்தியாவில் குறைந்த போதும் இந்த வரி உயர்வின் மூலம் அரசின் வருமானம் குறையவில்லை.