இந்தியாவில் கடந்த 29 நாட்களாகப் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் புதன்கிழமை அறிவிக்கப்பட்ட புதிய விலை உயர்வின் மூலம் பெட்ரோல் விலை வரலாற்று உச்சத்தைத் தொடக் காத்திருக்கிறது.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் 29 நாட்களுக்குப் பின் புதிய விலையை அறிவித்துள்ளது. இதன் படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 26 பைசா உயர்த்தி டெல்லியில் 83.97 ரூபாய்க்கு
விற்பனை செய்ய உள்ளது. இதேபோல் ஒரு லிட்டர் டீசல் விலை லிட்டருக்கு 25 பைசா உயர்ந்து 74.12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டெல்லி விலை ஏற்றம்
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ள படி லிட்டருக்கு பெட்ரோல் 26 பைசாவும், டீசல் 25 பைசாவும் உயர்ந்துள்ளது.
டெல்லியில் அக்டோபர் 4, 2018ல் ஒரு லிட்டர் பெட்ரோல் 84 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் தற்போது 83.97 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. புதிய உச்சத்தை அடைய நெருங்கியுள்ளது.
இதேபோல் டீசல் விலை அதிகப்படியாக ஜூலை 30, 2020ல் 81.94 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 74.12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 11 மாத உயர்வை அடைந்துள்ள நிலையில் அதிக வருமானத்தை ஈட்டி தனது வருவாய் சரிவை ஈடு செய்யும் திட்டத்தோடு உற்பத்தியைக் குறைப்பதற்கான இறுதி முடிவை இன்று சவுதி அரேபியா எடுத்து உள்ளது.
செயற்கை பற்றாக்குறை
சவுதி அரேபியா தனது கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்தால் OPEC அமைப்பில் இருக்கும் அனைத்து நாடுகளும் தங்களது உற்பத்தியைக் குறைக்கும். இதனால் கச்சா எண்ணெய் சந்தையில் செயற்கையாகப் பற்றாக்குறை ஏற்படுத்தி அதன் விலை உயர்த்தப்படும்.
OPEC+ அமைப்பு
இன்று OPEC+ அமைப்பில் இருக்கும் நாடுகள் மத்தியில் நடந்த முக்கியமான கூட்டத்தில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் இவ்வமைப்பில் இருக்கும் நாடுகள் அனைத்தும் ஒரு நாளுக்கு 1 மில்லியன் பேரல் அளவிலான உற்பத்தியைக் குறைக்க முடிவு செய்துள்ளது.
இது முன்பு கணிக்கப்பட்ட அளவை விடவும் மிகவும் அதிகம் என்பதால் பிப்ரவரி மாதம் முதல் கச்சா எண்ணெய் விலை புதிய உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கச்சா எண்ணெய் நிறுவனங்கள்
இதன் எதிரொலியாக டிசம்பர் 7, 2020 முதல் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தாமல் இருந்த இந்திய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப், பாரத் பெட்ரோலியம் கார்ப், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப் ஆகியவை சுமார் 29 நாட்களுக்குப் பின் தனது விலையை உயர்த்தியுள்ளது.
பெட்ரோல் விலை
இப்புதிய விலை உயர்வின் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை டெல்லியில் 83.97 ரூபாயாகவும், மும்பையில் 90.60 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 85.44 ரூபாயாகவும், சென்னையில் 86.55 ரூபாயாகவும், போபால் 95.8 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை
இன்றைய வர்த்தகத்தில் OPEC அமைப்பின் முடிவால் WTI கச்சா எண்ணெய் குறியீடு விலை 1.22 சதவீதம் வளர்ச்சி அடைந்து 50.57 டாலரகவும், பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 1.77 சதவீதம் வளர்ச்சி அடைந்து 54.55 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
சவுதி அரேபியா கச்சா எண்ணெய் விலை கிட்டதட்ட 6 சதவீதம் வளர்ச்சி அடைந்து 53.30 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.