இன்றைய காலகட்டத்தில் உணவு, உடை, இருப்பிடம் இதற்கு அடுத்தாற்போல், அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருக்கும் என்றால் அதில் பெட்ரோல் டீசலும் கட்டாயம் இருக்கும்.
அதிலும் இந்த கொரோனாவுக்கு பிறகு சொல்லவே தேவையில்லை. ஏனெனில் சமூக இடைவெளி, சுகாதாரம் இவற்றை கடைபிடிக்கும் விதமான, மக்கள் இரு சக்கர வாகனம், கார் என பலவற்றை அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். .
இதனால் வாகனங்களுக்கான எரிபொருள் தேவையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
அன்றாட தேவையாக மாறியுள்ள எரிபொருள்
ஆக இப்படியாக நமது அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறிவிட்ட பெட்ரோல் டீசல் தேவையானது, நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வரும் நிலையில், அதன் விலையானது தொடர்ந்து உச்சானிக் கொம்பை தொட்டு வருகிறது. இந்த நிலையில் சில மாநிலங்களில் 90 ரூபாயினையும் தாண்டியுள்ளது. போகிற போக்கினை பார்த்தால், விரைவில் சதம் அடித்து விடும் போல் இருக்கிறது.
கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப விலை
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, மாதம் இருமுறை பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்தது. ஆனால் தற்போதோ சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யும் திட்டம் அமலில் உள்ளது. இதன் காரணமாக தினசரி விலை ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.
அதிகரிக்கும் தேவை
கடந்த பல மாதங்களாகவே கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, நாடு தழுவிய லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் வீட்டிலேயே முடங்கும் அபாயம் நிலவியது. தொழிற்சாலைகளும் முடங்கின. ஆனால் தற்போது லாக்டவுனில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், வாகன ஓட்டிகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். தொழிற்சாலைகளும் வழக்கம் போல செயல்பட தொடங்கியுள்ளன. இதனால் பெட்ரோல், டீசலுக்கான தேவை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கடந்த 10 நாட்களாகவே பெட்ரோல் விலை சீராக அதிகரிக்க தொடங்கியுள்ளது.
ரூ.90ஐ தாண்டிய பெட்ரோல் விலை
மத்திய பிரததேசத்தின் தலைநகரான போபாலில் பெட்ரோல் விலை 90 ரூபாயினை தாண்டியுள்ளது. இதே டீசல் விலை அங்கு 80.10 ரூபாயாக அதிகரித்துள்ளது. மற்ற மாநிலங்களை விட இங்கு வாட் வரி அதிகம் என்பதால், இங்கு பெட்ரோல் விலை அதிகம். இங்கு பெட்ரோல் விலையில் 39 சதவீதமும், டீசல் விலையில் 28 சதவீதமும் வரியாக உள்ளது.
சென்னை நிலவரம் எப்படி
இதே சென்னையில் இன்று பெட்ரோல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி, 85.31 ரூபாயாகவே விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே போல டீசல் விலையும் மாற்றமின்றி 77.84 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு
கொரோனாவின் காரணமாக முடங்கி போன சர்வதேச நாடுகளால் கச்சா எண்ணெய் விலையானது ஒரு கட்டத்தில் மைனஸில் சென்றது. எனினும் தற்போது உலக நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறைய ஆரம்பித்துள்ள நிலையில், பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் காரணத்தால் லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தேவை அதிகரிக்க தொடங்கியுள்ளது. விலையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
தேவை அதிகரிப்பு
பல நாடுகளில் அமல்படுத்தப்பட்டிருந்த லாக்டவுன் காரணமாக, கச்சா எண்ணெய் தேவையானது குறைந்தது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓபெக் நாடுகள் உற்பத்தியையும் குறைத்தன. இது விலையை அதிகரிக்கும் ஒரு காரணியாக தற்போது மாறியுள்ளது. ஏனெனில் கச்சா எண்ணெய் தேவையாக அதிகரிக்க தொடங்கியிருந்தாலும், உற்பத்தியானது குறைக்கப்பட்டுள்ளது. ஆக இதன் காரணமாகவும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது.