இந்தியா ஏற்கனவே மருந்து ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் நாடாக இருக்கும் நிலையில், அதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு ஒரு திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
அது இந்தியாவில் 3 மருந்து பூங்காக்கள் மற்றும் நான்கு மருத்துவ உபகரண பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளது தான். இந்த பூங்காக்கள் நிறுவப்பட உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகிய நிலையில் அதன் இறுதி கட்ட முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
இது குறித்து வெளியான செய்தியில், மத்திய கெமிக்கல் மற்றும் உரங்கள் அமைச்சர் டி வி சதானந்த கவுடா, இந்தியாவில் நிறுவப்பட உள்ள மருந்து பூங்காக்கள் மற்றும் மருந்து உபகரணங்கள் பூங்கா உள்ளிட்ட இடங்களை தேர்ந்தெடுக்க உள்ள இடங்களை இறுதி செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு உற்பத்தியினை ஊக்குவிக்கும் பொருட்டு கிரிட்டிகல் APIs/ KSM உள்ளிட்ட சாதனங்களை உற்பத்தி செய்ய, மூன்று மொத்த மருந்து பூங்காக்கள் மற்றும் நான்கு மருத்துவ உபகரண உற்பத்தி பூங்காக்கள் உருவாக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை மார்ச் 12, 2020 அன்றே ஒப்புதல் அளித்துள்ளது.
இதில் இந்திய அரசு மாநில அரசுகளுக்கு மானியமாக மொத்த மருந்து பூங்காவிற்கு அதிகபட்சம் 1000 கோடி ரூபாயாகவும், இதே மருத்துவ உபகரணங்கள் உற்பத்திக்கு 100 கோடி ரூபாய் மானியமும் அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இந்த திட்டமானது உள்நாட்டில் மருந்து உற்பத்தியை ஊக்கப்படுத்துவதற்கும், மருத்துவ உபகரணங்கள் உற்பத்தியினை ஊக்கப்படுத்துவதற்கும் பயன்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு மொத்த மதிப்பு சுமார் 13,760 கோடி ரூபாய் நிதியாக இருக்கும். இந்த திட்டத்தின் மூலம் 46,400 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்து உற்பத்தி அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் மருத்துவ சாதனங்கள் உற்பத்தி பூங்காக்கள் திட்டமானது சுமார் 68,437 கோடி ரூபாய் மதிப்புள்ள மருத்துவ சாதனங்கள் உற்பத்திக்கு வழிவகுக்கும். அதோடு இந்த திட்டமானது கணிசமான அளவு வேலை வாய்ப்பினையும் ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இது தொடர்பாக பஞ்சாப் நிதியமைச்சர் மன்பிரீத் சிங் பாடல் மருந்து பூங்கா அமைப்பது குறித்து சதானந்த கவுடாவை சந்தித்து, பஞ்சாப்பில் ஒரு பூங்காவை அமைப்பது குறித்து பரிசீலிப்பதற்காக ஒரு கோரிக்கை கடிதத்தினை வழங்கியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. எனினும் இந்த பூங்காக்கள் எங்கெங்கு அமைய உள்ளது என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.