கொரோனா இரண்டாம் தொற்றின் தாக்கம் என்பது மிக தீவிரமாக பரவி வரும் நிலையில், தடுப்பு மருந்துகளுக்கும் தட்டுபாடு ஏற்படலாம் என மருத்துவ துறையினர் எச்சரித்துள்ளனர்.
உலக நாடுகள் பலவும் தங்களது மக்களுக்கு தடுப்பூசிகளை போட ஆரம்பித்துள்ளன. இந்த நிலையில் இந்தியாவிலும் முதல் கட்டமாக 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இதற்கிடையில் மே 1 முதல் 18 வயது முதல் 44 வயது வரையிலானவர்களுக்கு போடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
எனினும் ஆர்டர் செய்யப்பட்ட தடுப்பூசிகள் கிடைக்காத நிலையில் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. ஏற்கனவே ஆர்டர் செய்த தடுப்பு மருந்துகள் கிடைக்காத நிலையில், தற்போது கொரோனா தடுப்பு மருந்துக்கான மூலதன பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ துறையினர் கூறுகின்றனர்.
மருத்துவ மூலதன பொருட்களின் விலை உயர்வு
இதனால் கொரோனா தடுப்பு மருந்து பொருட்களுக்கான மூலதன பொருட்கள் விலையானது, 200% வரையில் விலை அதிகரித்துள்ளதாக மருந்து உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர். இது உலக நாடுகளில் அனைத்திற்கும் சப்ளை செய்வதால் தாமதம் என்றாலும் கூட, கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சீனா இந்தியாவுக்கான சரக்கு விமான சேவையையும் ரத்து செய்துள்ளதே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
சீனாவின் சரக்கு விமானங்கள் ரத்து
சீனாவின் சரக்கு விமான போக்குவரத்து நிறுவனமான சிச்சுவான் ஏர்லைன்ஸ் டெல்லிக்கு இயக்கும் 6 வழிதடங்களில், சரக்கு விமானங்களை 15 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. இது 15 நாட்களுக்கு பிறகு கொரோனா கட்டுக்குள் வரும்போது மீண்டும் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மருந்து நிறுவனங்கள் எச்சரிக்கை
மருந்து உற்பத்தியாளர்கள் ஏற்கனவே இது குறித்து அரசிடம் முறையிட்டுள்ளதாக கூறியுள்ளனர். அதோடு அடுத்து வரும் சில மாதங்களில் சில முக்கிய தடுப்பு மருந்துகளுக்கான தட்டுப்பாடுகள் ஏற்படலாம். மேலும் சந்தையில் மருந்து தட்டுப்பாடு அதிகரிக்கும் போது இன்னும் விலை அதிகரிக்கலாம் என்றும் எச்சரித்துள்ளனர்.
விலை அதிகரிப்பு
APIs விலை, குறிப்பாக கொரோனா மருந்து உற்பத்திக்கு தேவையான ஐவர்மெக்டின், மெதைல்பிரெட்னிசோலோன், டாக்சிசைக்கிளின், எனோக்ஸாபரின், பாராசிட்டமால், அசித்ரோமைசின், மெரோபெனெம் மற்றும் பிப்ரடசோ உள்ளிட்ட மருந்துகள் விலையானது கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 30 - 200% வரையில் அதிகரித்துள்ளதாகவும் பட்டியலிட்டுள்ளன.
தற்போதைய விலை நிலவரம் என்ன?
ஐவர்மெக்டின் மார்ச் 2021ல் கிலோவுக்கு 18,000 ரூபாயாக இருந்த நிலையில், ஏப்ரலில் 54,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது சுமார் 200% அதிகமாகும்.
மெதைல்பிரெட்னிசோலோன் விலை, மார்ச் 2021ல் கிலோவுக்கு 85,000 ரூபாயாக இருந்த நிலையில், ஏப்ரலில் 1,90,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது சுமார் 123.5% அதிகமாகும்.
மெரோபெனெம் விலை, மார்ச் 2021ல் கிலோவுக்கு 81,000 ரூபாயாக இருந்த நிலையில், ஏப்ரலில் 1,50,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது சுமார் 85.2% அதிகமாகும்.
டாக்சிசைக்கிளின் விலை, மார்ச் 2021ல் கிலோவுக்கு 7,500 ரூபாயாக இருந்த நிலையில், ஏப்ரலில் 12,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது சுமார் 60% அதிகமாகும்.
பிப்ரடசோ-வின் விலை, மார்ச் 2021ல் கிலோவுக்கு 6,700 ரூபாயாக இருந்த நிலையில், ஏப்ரலில் 9,500 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது சுமார் 41.8% அதிகமாகும்.
எனோக்ஸாபரின் விலை, மார்ச் 2021ல் கிலோவுக்கு 17,00,000 ரூபாயாக இருந்த நிலையில், ஏப்ரலில் 25,00,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது சுமார் 47.1% அதிகமாகும்.
பாராசிட்டமால் விலை, மார்ச் 2021ல் கிலோவுக்கு 550 ரூபாயாக இருந்த நிலையில், ஏப்ரலில் 800 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது சுமார் 45.5% அதிகமாகும்.
அசித்ரோமைசின் விலை, மார்ச் 2021ல் கிலோவுக்கு 9,500 ரூபாயாக இருந்த நிலையில், ஏப்ரலில் 12,300 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது சுமார் 29.5% அதிகமாகும். (இந்த தரவுகள் தி பிரிண்டில் இருந்து எடுக்கப்பட்டது)
அரசு தலையீடு
மருந்து உற்பத்தியாளர்கள் தொடர்ச்சியான விலை ஏற்ற இறக்கத்துடன் போராடி வரும் நிலையில் இது குறித்து எச்சரித்துள்ளனர். ஆக அரசின் தலையீடு என்பது இல்லாவிட்டால், வரும் மாதங்களில் பற்றாக்குறை ஏற்படலாம் என எச்சரித்துள்ளனர். இதனால் உள்நாட்டிலும் மருந்து தட்டுப்பாடு ஏற்படலாம். மருந்து ஏற்றுமதியிலும் பின்னடைவை சந்திக்கலாம் IDMA தரப்பு கூறியுள்ளது.
Array
சீனா இந்தியாவுக்கு சரக்கினை நிறுத்தியுள்ள இந்த நிலையில், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சில மருந்துகளுக்கு பெரும் பற்றாக்குறை ஏற்படலாம். ஏற்கனவே மக்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் அரசு இந்த பிரச்சனையில் தலையிட்டு விரைவில் தீர்க்காவிடில் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படும். அதோடு விலையை அதிகரிக்க வழிவகுக்கும் என கூறியுள்ளனர்.
மருந்து நிறுவனங்களுக்கு சவால்
மருந்து உற்பத்தியாளர் சங்கம் (IDMA) ஏற்கனவே இது குறித்து அரசுக்கு விளக்கமும் அளித்துள்ளது. மூலதன பொருட்கள் தவிர, போக்குவரத்து செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பலவும் மருந்து விலையில் பாதிப்பினை ஏற்படுத்தலாம். இதனால் மருந்து நிறுவனங்களுக்கு கடுமையான சவால்கலை சந்திக்கலாம் என ஐடிஎம்வின் நிர்வாக இயக்குனர் அசோக் மதன் கூறியுள்ளார்.
முக்கிய காரணம்
மருந்துகளுக்கு தொடர்ந்து தேவை உள்ள நிலையில், மூலப் பொருட்களுக்கான விலை அதிகரித்து வருகின்றது. அதே நேரம் மூலப் பொருட்கள் பற்றாக்குறையும் நிலவி வருகின்றன. ஆக தொடர்ந்து சப்ளை குறைக்கப்பட்டால், முக்கிய மருந்துகளின் உற்பத்தி நிறுத்தப்படலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதன் விளைவாக பதுக்கல்களும் அதிகரிக்கலாம். சீனாவில் இருந்து சரக்கு சேவை நிறுத்தப்பட்டதாக வெளியான செய்தியும், விலை அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது.
ஆக்சிஜன் பற்றாக்குறை
சில மருந்து உற்பத்திற்கு ஆக்சிஜன் தேவை. தற்போது அதுவும் சற்று குறைந்துள்ளது. இது தவிர எந்த ஆலையும் முழுமையாக செயல்படவில்லை. ஆள் பற்றாக்குறை நிலவி வருகின்றது. இப்படி விலை அதிகரிப்புக்கு பல காரணங்கள் உள்ளன. எப்படியிருப்பினும் மூலதன பொருட்கள் பற்றாக்குறை என்பது, விலையேற்றத்திற்கு முக்கிய காரணமாக அமையலாம் என உற்பத்தியாளர்கள் எச்சரித்துள்ளனர்.