கொரோனா தொற்றுக் காலத்தில் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் மூலம் மக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் அதிகளவில் ஆன்லைன் மூலம் வாங்க துவங்கியுள்ள காரணத்தால், பல டிஜிட்டல் சேவை நிறுவனங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கையும், வர்த்தக அளவும் கடந்த 1.5 வருடத்தில் பல மடங்கு உயர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த வகையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அமேசான், டாடா போன்ற முன்னணி நிறுவனங்கள் ஆன்லைன் பார்மா துறையில் முன்னணி நிறுவனங்களைக் கைப்பற்றித் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளது.
இந்நிலையில் பெரிய நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க வேண்டும் என்பதற்காகவே ஆன்லைன் பார்மா துறையில் இருக்கும் இரு முக்கிய நிறுவனங்கள் ஒன்றாக இணைந்துள்ளது.
ஆன்லைன் பார்மா துறை
இதன் படி மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் தனது சேவையை விரிவாக்கம் செய்து வரும் பார்மாஈசி நிறுவனம் ஆன்லைன் பார்மா துறையில் சக போட்டி நிறுவனமான மெட்லைப் நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது.
மெட்லைப் - பார்மாஈசி கைப்பற்றல்
இந்தக் கைப்பற்றல் மூலம் பார்மாஈசி நிறுவனத்தின் தாய் நிறுவனமான API ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்தின் 19.59 சதவீத பங்குகளை மெட்லைப் நிறுவனத்தின் பங்குதாரர்கள் பெற உள்ளனர். இதுகிட்டதட்ட 240 மில்லியன் டாலர் மதிப்பிலானது.
ஈ-பார்மா துறையின் முதல் யூனிகார்ன்
ஆன்லைன் பார்மா வர்த்தகத் துறையில் இந்தியாவில் முதல் யூனிகார்ன் நிறுவனமான பார்மாஈசி கடந்த மாதம் தான் டிபிஜி குரோத், பிரோசஸ் வென்சர்ஸ் ஆகிய முதலீட்டு நிறுவனத்திடம் இருந்து சுமார் 320 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை ஈர்த்தது.
வர்த்தக விரிவாக்கம்
இந்த முதலீடு மூலம் பார்மாஈசி நிறுவனத்தின் நிதிநிலை மேம்பட்டு உள்ள காரணத்தால் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் தென்னிந்திய பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் பெங்களுரை சேர்ந்த மெட்லைப் நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது. இந்தக் கைப்பற்றல் மூலம் மெட்லைப் வாடிக்கையாளர்கள் பார்மாஈசி நிறுவன தளத்தைப் பயன்படுத்தவும், ரீடைல் பார்ட்னர்ஸ் பார்மாஈசி நிறுவனத்தில் இணைய உள்ளனர்.
இந்தியாவின் மாபெரும் நிறுவனம்
மெட்லைப் - பார்மாஈசி நிறுவன கைப்பற்றல் குறித்துப் பார்மாஈசி நிறுவனத்தின் தாவல் ஷா கூறுகையில், இந்த இணைப்பின் மூலம் இந்தியாவில் அதிகத் தொலைவிற்கு ஆன்லைன் பார்மா சேவை வழங்கும் இந்தியாவின் மாபெரும் நிறுவனமாக வளர்ந்துள்ளோம் என லின்கிடுஇன் தளத்தில் தெரிவித்துள்ளார்.
16 பில்லியன் டாலர் சந்தை
2025ஆம் நிதியாண்டுக்குள் இந்தியாவில் சுமார் 16 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தகச் சந்தையாக ஆன்லைன் பார்மா துறை வளர்ச்சி அடைய உள்ளதாகக் கணிக்கப்பட்டு உள்ளது.
முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்கள்
இந்தத் துறையில் கட்டாயம் பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்த வேண்டும் என முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்கள் திட்டமிட்டு அதிகளவிலான முதலீட்டை இத்துறையில் முதலீடு செய்து வருகிறது.
ரிலையன்ஸ் - டாடா - அமேசான் ஆரம்பம்
இதன் வாயிலாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சுமார் 620 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்து நெட்மெட்ஸ் நிறுவனத்தின் 65 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளது. டாடா குரூப் 1MG நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றியுள்ளது. அமேசான் சொந்தமாக மருந்து விற்பனை பிரிவைத் துவங்கியுள்ளது. இவை அனைத்தும் கடந்த ஒரு வருடத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.