2022 ஆண்டு நவம்பர் மாத துவக்கத்தில் பிளிப்கார்ட் குழுமத்தின் கீழ் இயங்கும் இந்திய பேமெண்ட் சேவை நிறுவனமான PhonePe, தனது தலைமையகத்தைச் சிங்கப்பூரில் இருந்து இந்தியாவிற்கு மாற்றி அமைத்துள்ளதாக அறிவித்தது அனைவருக்கும் நினைவிருக்கும்.
நவம்பர் மாதத்தில் துவங்கிய பணிகளை டிசம்பர் மாதத்தின் இறுதியில் போன்பே நிறுவனம் முழுமையான இந்திய நிறுவனமாக மாறியுள்ளது. பிளிப்கார்ட் நிறுவனம் போன்பே நிறுவனத்தை 6 வருடங்களுக்கு முன்பு கைப்பற்றிய நிலையில், இந்தியச் சந்தையில் ஐபிஓ வெளியிடுவதற்காகப் போன்பே இந்தியாவுக்கு மாறியுள்ளது.
இந்தியாவில் மொத்த வர்த்தகத்தை வைத்திருந்தாலும் பிளிப்கார்ட் தனது தலைமையகத்தைச் சிங்கப்பூரில் தான் வைத்துள்ளது. இந்த நிலையில் தான் அதன் பேமெண்ட் சேவை கிளை நிறுவனமான PhonePe மட்டும் தனது தலைமையகத்தை இந்தியாவிற்கு மாற்றியுள்ளது.
இதன் எதிரொலியாகத் தற்போது வெறும் வரி தொகையைச் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது வால்மார்ட்.
வால்மார்ட்
அமெரிக்காவின் முன்னணி நுகர்வோர் நிறுவனம் தான் வால்மார்ட் ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் வர்த்தகம் செய்து வரும் வால்மார்ட், இந்திய சந்தையில் நுழைய வேண்டும் என்பதற்காகப் பெரும் தொகையைக் கொண்டு பிளிப்கார்ட் நிறுவனத்தைக் கைப்பற்றியதின் மூலம் போன்பே நிறுவனமும் அதன் கட்டுப்பாட்டுக்கு வந்தது.
1 பில்லியன் டாலர் வரி
இந்த நிலையில் போன்பே நிறுவனம் சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு மாறிய நிலையில், வால்மார்ட் இன்க் மற்றும் பிற போன்பே பங்குதாரர்கள் கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர் வரி செலுத்த வேண்டியிருக்கும் என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
PRE-MONEY மதிப்பீடு
PhonePe நிறுவனம் சுமார் 12 பில்லியன் டாலர் PRE-MONEY மதிப்பீட்டில் இதுவரையில் ஜெனரல் அட்லாண்டிக், கத்தார் முதலீட்டு ஆணையம் மற்றும் பிற நிறுவனங்களிடமிருந்து முதலீட்டை திரட்டியுள்ளது. இதன் மூலம் மிகப்பெரிய கட்டணத்தை வரியாக அதன் முதலீட்டாளர்கள் செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
கடைசி முதலீட்டு திரட்டல்
பின்டெக் நிறுவனமான போன்பே டிசம்பர் 2020 இல் கடைசியாக 5.5 பில்லியன் மதிப்பீட்டில் முதலீட்டை திரட்டியது. 2020-க்கு பின்பு முதலீட்டை திரட்டாத காரணத்தாலும், இதன் வர்த்தகம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளதாலும், தற்போது PRE-MONEY மதிப்பீட்டில் 12 பில்லியன் டாலராக இருக்கும் கணிக்கப்பட்டு உள்ளது.
8,000 கோடி ரூபாய் வரி
டைகர் குளோபல் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட பல முதலீட்டாளர்கள் இப்போது இந்தியாவில் PhonePe இன் பங்குகளைப் புதிய விலையில் வாங்கியுள்ளனர், இதனால் தற்போதுள்ள அனைத்து பங்குதாரர்களும் இணைந்து சுமார் 8,000 கோடி ரூபாய் அளவிலான வரி தொகையைச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகத் தெரிகிறது.