பிஐ இண்டஸ்ட்ரீஸ் என்ற விவசாயத்துறையை சேர்ந்த பங்கானது 10 ஆண்டுகளில் 9000 சதவிகிதம் ஏற்றம் கண்டுள்ளது. சுமார் 1 லட்சம் 10 வருடத்திற்கு முன்பு முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 90 லட்சம் ரூபாய்.
இந்த நிறுவனம் கடந்த 1947ம் ஆண்டு உதய்ப்பூரில் (ராஜஸ்தான்) நிறுவப்பட்டது.
பல்வகை வணிகங்களை செய்து வரும் இந்த நிறுவனம் கடந்த 1993ம் ஆண்டு முதல், பிஐ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதலிடம்
விவசாயம் சம்பந்தமான உள்ளீட்டு பொருட்கள், ஃபைன் கெமிக்கல்ஸ், பாலிமர்ஸ், மற்றும் பொறியியல் சேவைகள் என பல விதமான வர்த்தகத்தை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனம் இந்தியாவின் விவசாயம் சம்பந்தபட்ட டாப் ஐந்து நிறுவனங்களில் முதலிடத்தில் உள்ள ஒரு நிறுவனம் தான் பிஐ இண்டஸ்ட்ரீஸ். இது வேளாண் சம்பந்தப்பட்ட கெமிக்கல்ஸ் மற்றும் சந்தைப்படுத்துதல், ஏற்றுமதியாளர்களில் முதலிடத்தில் உள்ளது.
பிஐ என்ன செய்கிறது?
இந்த நிறுவனம் தனித்துவமான இரண்டு சந்தை பிரிவுகளில் செயல்படுகிறது. ஒன்று உள்நாட்டு சந்தையில் பயிர் பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் தாவரங்களுக்கு ஊட்டசத்துகளை வழங்கும் உள்நாட்டு வேளாண்மை உள்ளீடுகள். இரண்டாவது உலகளாவிய அளவில் ரசாயன பொருட்களின் செயல்முறை ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியை மேற்கொள்ளும் தனிப்பயன் தொகுப்பு உள்ளிட்டவற்றையும் செய்து வருகிறது.
கடந்த காலத்தில் விலை என்ன?
கடந்த 2009ம் ஆண்டில் இதே டிசம்பர் மாதம், 3ம் தேதி இந்த பங்கின் விலையானது வெறும் 16.46 ரூபாயாக இருந்துள்ளது. இதே இன்று இந்த பங்கின் விலையானது 1483 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது. எனினும் இது டிசம்பர் 3, 2019 அன்று 1479 ரூபாய் என்ற நிலையில் வர்த்தகமாகியுள்ளது. 2009ம் வருடம் டிசம்பர் மாதத்தில் இந்த பங்கில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பானது 90 லட்சம் ரூபாயாகும். கிட்டதட்ட 9000% லாபமாகும்.
ஒரு வருடத்தில் லாபம்
கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இந்த பங்கானது 137.63 சதவிகிதம் இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதே கடந்த ஆண்டு 83.36 சதவிகிதம் லாபத்தை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 2019ம் நிதியாண்டு முதல் 2022 நிதியாண்டு வரையில் இதன் வளர்ச்சி 23 சதவிகிதம் இருக்கும் என்றும் இந்த நிறுவனம் தரகு நிறுவனங்கள் எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது. இசாக்ரோ நிறுவனத்தின் பங்குகளை பிஐ நிறுவனம் வாங்குவதாக தெரிவித்த பின்னர், இதன் பங்கு விலை 20 சதவிகிதம் அதிகரித்தது. ஒரே நாளில் சுமார் 248 புள்ளிகள் அதிகரித்தது.
போட்டி நிறுவனங்கள் எப்படி?
விவசாய துறையை சேர்ந்த இந்த பங்கானது நல்ல லாபம் கண்டுள்ள நிலையில், மற்ற போட்டி நிறுவனங்கள் எப்படி லாபம் கண்டுள்ளது. யுபிஎல் லிமிடெட், பயேர் க்ரூப்சயின்ஸ், BASF சயின்ஸ், அன்ட் ரால்லிஸ் இந்தியா உள்ளிட்ட பங்குகளும் நல்ல லாபத்தில் உள்ளன. குறிப்பாக யுபிஎல் லிமிடெட் 428.28 சதவிகித லாபத்துடனும், இதே பயேர் க்ரூப்சயின்ஸ் நிறுவனம் 653.81 சதவிகித லாபமும், இதே BASF சயின்ஸ், அன்ட் ரால்லிஸ் இந்தியா நிறுவனம் 170 சதவிகித லாபத்துடனும், 194.73 சதவிகித லாபத்துடனும் உள்ளன.
நல்ல வருவாய்
இந்த நிறுவனத்தின் வருவாய் கடந்த 2019ம் நிதியாண்டில் 24 சதவிகிதம் அதிகரித்து, 2,900.40 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே 2018ம் நிதியாண்டில் இது 2,337.33 கோடி ரூபாயாக இருந்தது. இதுவே நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 30 சதவிகித நிகர லாபத்தினை பதிவு செய்து, 82.2 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே வருவாய் 25 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும், இதே ஏற்றுமதி 52 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளது இந்த நிறுவனம். எனினும் உள்நாட்டு விற்பனையானது சற்று மந்தம் தான் என்றும் தெரிவித்துள்ளது.
குறிப்பிடத்தக்க வளர்ச்சி
இந்த அறிக்கையில் குறிப்பிட்டது போல் இந்த 10 வருட காலப்பகுதியில் இந்த நிறுவனம் குறிப்பிடத்தக்க அளவு நிதி செயல்திறனில் ஏற்றத்தைக் கண்டுள்ளது. மார்ச் 2019-வுடன் முடிவடைந்த நிதியாண்டில் 2900.90 கோடி வருவாய் ஈட்டியுள்ள இந்த நிறுவனம், கடந்த மார்ச் 2009ல் வெறும் 599.08 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இடைப்பட்ட காலத்தில் நிகரலாபம் கிட்டதட்ட 10 மடங்கு அதிகரித்துள்ளது. 2019ம் நிதியாண்டில் 407.70 கோடி ரூபாயாகவும், இதே 2010ல் 40.95 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.