சமீபத்திய காலமாக ரூபாய் நோட்டுகள் குறித்தான செய்திகள் பரவலாக வெளிவந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக அந்த ரூபாய் நோட்டுகளில் எதுவும் எழுதப்பட்டிருந்தால் அது செல்லாது என கூறப்படுகின்றது. இது உண்மையா? அப்படி இந்த நோட்டுகளை என்ன செய்வது? வாருங்கள் பார்க்கலாம்.
சில இடங்களில் இன்றும் இவ்வாறு பேனாவால் எழுதப்பட்ட நோட்டுகள் வாங்கப்படுவது இல்லை.
இது செல்லாதா?
சமீபத்திய காலமாக சமூக வலைதளத்திலும் இது குறித்தான செய்தியானது வெளியாகிய வண்ணம் உள்ளது. இதற்கிடையில் ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல் என ஒரு செய்தியும் பரவலாக பரவி வருகின்றது. அந்த செய்தியின் படி, புதிய நோட்டுகளில் எதையும் எழுதினால் அது செல்லாது என்றும் கூறப்படுகின்றது.
போலி செய்தி
இது குறித்த அறிக்கையினை pib இந்தியா உண்மையை சரிபார்க்கும் விதமாக அலசி ஆராய்ந்து முடிவினை வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி இத்தகைய வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லை. இது உண்மை இல்லை என்ற மறுத்துள்ளது. ஆக கரன்சி நோட்டுகளில் எழுதினால் அது செல்லாது என்பது போலியான செய்தி என தெரிவித்துள்ளது.
கண்டிப்பாக செல்லும்
மேலும் எழுத்துகள் உள்ள ரூபாய் நோட்டுகள் செல்லும் என்றும், அதை தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றும் pib தெரிவித்துள்ளது. இதனை வங்கிகளோ அல்லது வேறு ஏதேனும் கடைகளோ செல்லாது என வாங்க மறுக்க முடியாது எனவும் தெளிவு படுத்தியுள்ளது.
கோரிக்கை என்ன?
எனினும் ரூபாய் தாள்களில் பேனாவால் எழுதுவதால் அதன் பயன்பாட்டு காலம் என்பது குறைய வாய்ப்பிருக்கிறது. ஆக அப்படி யாரும் எழுத வேண்டாம் எனவும் pib அறிவுறுத்தியுள்ளது.
உண்மையில் இதுபோன்ற செய்கைகள் பரவலாக காணப்படுகின்றது. ஆக இதுபோன்ற பழக்கங்களை நிறுத்திக் கொள்வதால், ரூபாய் தாள்களின் ஆயுட்காலம் என்பது அதிகரிக்கும். பல வருடங்களுக்கு அதனை நாம் வைத்து பயன்பெற முடியும்.
இது உண்மை தான்
மற்றொரு அறிக்கையில், BHIM UPI இப்போது அதிகாரப்பூர்வ வாட்ஸ் அப் சேனலைக் கொண்டுள்ளது. இது பயனர்கள் சமீபத்திய அம்சங்கள் மற்றும் சலுகைகளுடன் அப்டேட்டில் இருக்க உதவும் என்றும் ஒரு செய்தி பரவலாக பரவி வந்தது. வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அந்த சேவையைப் பெற, +918291119191 என்ற எண்ணில் 'Hi' என்று மெசேஜ் அனுப்ப வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இது குறித்து PIB நடத்திய ஆய்வில் அது உண்மை என உறுதிப்படுத்தியுள்ளது.