இன்றெல்லாம் மக்கள் சமூக ஊடக தளங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதில் சில நன்மைகளும் இருக்கிறது. அதே நேரம் சில பிரச்சனைகளும் இருக்கிறது. சோசியல் மீடியா தளங்கள் உண்மையிலேயே ஒரு விஷயத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் கருவி எனலாம். இதையே தற்போது மோசடிக்காரர்களும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அப்படித்தான் பிரதமர் நரேந்திர மோடி பேசுவது போல ஒரு வீடியோ சமூக ஊடக தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
அதில் ஒரு குறிப்பிட்ட முதலீட்டுத் தளத்தில் ரூ.22,000 முதலீடு செய்தால், மாதம் ரூ.25 லட்சம் வருமானம் பெறலாம் என்று பிரதமர் கூறுவது போல ஒரு ஏஐ வீடியோ பகிரப்பட்டுள்ளது. அந்த முதலீட்டு தளத்திற்கு ஆதரவாக அவர் பேசுவது போல உருவாக்கப்பட்டுள்ளது. இதை பார்க்கும் பலரும் உண்மை என்று நம்பி வந்தனர்.

ஆனால் அரசு பத்திரிக்கை நிறுவனமான பிரஸ் இன்பர்மேஷன் பியூரியோ (PIB) இந்தச் செய்தியை முற்றிலுமாக மறுத்துள்ளது. இது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோ என்றும், பிரதமர் நரேந்திர மோடி எந்த முதலீடு திட்டத்திற்கும் ஆதரவாக பேசவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. அதற்காக தங்கள் அதிகாரப்பூர்வ X பக்கத்தில் பிஐபி ஒரு போஸ்டை பதிவிட்டுள்ளது.
பொதுமக்கள் இதுபோன்ற மோசடிகளை நம்பி ஏமாற வேண்டாம். சந்தேகத்திற்கிடமான லிங்க் வந்தால் அதில் ஓடிபி மற்றும் பிற முக்கிய தகவல்களை பகிர வேண்டாம் என்றும், இத்தகைய பிஷிங் மோசடிகளால் நீங்கள் நீண்ட நாட்கள் சேமித்து வைத்த பணத்தை இலக்க நேரிடும் வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது.
சமீபகாலமாகவே முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்ய வைத்து மக்களின் பணத்தை அபகரிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. அதற்கு இந்த டீப்பேக் வீடியோக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த செய்திக்கு கூடுதலாக மற்றொரு செய்தியும் சமூக ஊடக தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அப்பாவி மக்களை குறிவைத்து அவர்களுடைய வங்கி கணக்கில் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனை நடந்திருப்பதாக மெசேஜ் வருகிறது. இதனால் வங்கி கணக்கு பிளாக் செய்யப்பட்டு விடும் என்றும், இதை தடுப்பதற்கு கீழே உள்ள ஏபிகே ஃபைலை டவுன்லோட் செய்யும்படி கூறப்படுகிறது.
அதை படிக்கும் மக்களும் உண்மை என்று நம்பி டவுன்லோட் செய்து விடுகின்றனர். அடுத்த நிமிடமே அவர்களுடைய மொபைல் மோசடிக்காரர்களின் கண்ட்ரோலுக்கு சென்று விடுகிறது. இதனால் அவர்கள் அக்கவுண்டில் இருக்கும் பணம் காலியாவதோடு முக்கியமான ஆவணங்களின் விவரங்களும் திருடப்படுகிறது.
இப்படி வெவ்வேறு ட்ரிக்குகளை பயன்படுத்தி கொள்ளையடிக்க தொடங்கியுள்ளனர். எனவே மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற செய்திகள் பரவினால் உடனடியாக அதன் உண்மை தன்மையை அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்களை பயன்படுத்தி சரிபார்த்துக் கொள்வது நல்லது. ஒருவேளை உங்களுடைய வங்கி கணக்கு பிளாக் செய்யப்படும் என்ற மெசேஜ் வந்தால் நேரடியாக வங்கி கிளைக்கு சென்று பார்க்கலாம் அல்லது வங்கியின் கஸ்டமர் சர்வீஸ் சேவையை அழைக்கலாம்.


Click it and Unblock the Notifications
