இந்தியா ஒரு முக்கியமான கால கட்டத்தில் இருக்கிறது. கொரோனா பிரச்சனைகளில் இருந்து இந்திய பொருளாதாரத்தை மீட்டு எடுக்கவும், தன் எதிர்காலத்தை உறுதிப்படுத்தவும் ஒரு நல்ல திட்டத்தைக் கொண்டு வந்து இருக்கிறது இந்தியா.
இந்த சூப்பர் திட்டத்தால், செல்போன் கம்பெனிகள், சீனா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளை விட்டு விட்டு, இந்தியாவை நோக்கி வரத் தயாராக இருக்கிறார்கள்.
அந்த திட்டத்தின் விவரங்கள் என்ன? செல்போன் கம்பெனிகள் இந்தியாவைத் தேர்வு செய்வது ஏன்? இந்த திட்டத்தால் சீனாவுக்கு என்ன மாதிரியான நெருக்கடிகள் உண்டாகும்? வாருங்கள் எல்லாவற்றையும் விரிவாகப் பார்ப்போம்.
சூப்பர் திட்டம்
Production Linked Incentive (PLI) தான் அந்த சூப்பர் அதிரடித் திட்டத்தின் பெயர். இந்த திட்டத்தின் கீழ், இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோன் & சில எலெக்ட்ரானிக் உதிரிபாகங்களை தயாரிப்பதற்கு, அரசு சில ஊக்கத் தொகைகளைக் கொடுக்கிறார்கள். இந்த செய்தியைக் கேட்டு ஆப்பிள், சாம்சங் தொடங்கி பல்வேறு கம்பெனிகளும், தங்கள் கவனத்தை இந்தியா பக்கம் திருப்பி இருக்கிறார்கள்.
எப்போதில் இருந்து
இந்த திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை, கடந்த ஆகஸ்ட் 01, 2020 முதல் அமலுக்கு வந்து இருக்கிறதாம். 2019 - 20 நிதி ஆண்டை அடிப்படையாகக் கொண்டு, இந்த திட்டத்தின் கீழ் அரசு 4 - 6 சதவிகிதம் ஊக்கத் தொகையை, அடுத்த 5 ஆண்டுகளுக்கு, இந்தியாவில் உற்பத்தி செய்யும் கம்பெனிகளுக்கு வழங்க இருக்கிறார்களாம்.
இந்தியாவின் நிலை
இப்போதே, சீனாவுக்குப் பிறகு, உலக அளவில் அதிக ஸ்மார்ட்ஃபோன்களைத் தயாரிக்கும் நாடாக இருக்கிறது இந்தியா. 2019-ம் ஆண்டு இந்தியாவில் 30 கோடி (300 மில்லியன்) போன்கள் அசெம்பிள் ஆகி இருக்கிறதாம். 2014-ம் ஆண்டில் வெறும் 2 போன் அசெம்பிளிங் அல்லது உற்பத்தி கம்பெனி இருந்த நிலை மாறி, தற்போது 2019-ம் ஆண்டில் சுமார் 100 செல்போன் உற்பத்தி & அசெம்பிளிங் கம்பெனிகள் இந்தியாவில் இருக்கின்றன. இந்த பி எல் ஐ திட்டத்தால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
யார் எல்லாம் வந்திருக்கிறார்கள்
சரி பி எல் ஐ திட்டத்தின் கீழ், எத்தனை கம்பெனிகள் விண்ணப்பித்து இருக்கிறார்கள், என்று பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. விஸ்ட்ரான் (Wistron), பெகட்ரான் (Pegatron), ஃபாக்ஸ்கான் (Foxconn) போன்ற ஆப்பிளின் ஒப்பந்த உற்பத்தியாளர்கள், ஹான் ஹாய் (Hon Hai), சாம்சங் (Samsung) போன்ற முன்னணி கம்பெனிகளே இந்த பி எல் ஐ திட்டத்தின் கீழ் இந்தியாவில் உற்பத்தி செய்ய விண்ணப்பித்து இருக்கிறார்களாம். இது போல சில ஜெர்மனி & ஆஸ்ட்ரிய நாட்டைச் சேர்ந்த கம்பெனிகள் கூட இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து இருக்கிறார்களாம்.
இந்திய கம்பெனிகள் கம் பேக்
அவ்வளவு ஏன், இந்தியாவின் மைக்ரோமேக்ஸ், லாவா போன்ற கம்பெனிகள் கூட, இந்த பி எல் ஐ திட்டத்தைப் பயன்படுத்தி, ஒரு கம் பேக் கொடுக்க திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறார்களாம். மைக்ரோமேக்ஸ் 500 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறார்களாம். லாவா தற்போது ஆண்டுக்கு 4 கோடி போன்களை தயாரித்துக் கொண்டு இருக்கிறார்களாம். இதை 3 மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறார்களாம்.
எவ்வளவு உற்பத்தி செய்வார்கள்
இந்த பி எல் ஐ திட்டத்தின் கீழ், இந்தியாவில், மொபைல் போன் உற்பத்தியாளர்கள் சுமாராக 27.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு செல்போன்களை உற்பத்தி செய்வார்கள் எனக் கணித்து இருக்கிறது India Cellular and Electronics Association (ICEA) என்கிற அமைப்பு. இது அரசு கணித்து இருக்கும் 11 லட்சம் கோடி ரூபாய் மதிப்பை விட சுமார் 2.5 மடங்கு அதிகம்.
ஏன் இந்தியா
உலக அளவில் சீனா தான் ஸ்மார்ட்ஃபோன் ஏற்றுமதிக்கான, தலை நகரம் போல செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. இதை நாம் பலரும் செய்திகளில் படித்து இருப்போம். ஆனால், சீனாவைத் தொடர்ந்து, வியட்நாம் என்கிற குட்டி நாடு, ஸ்மார்ட்ஃபோன் ஏற்றுமதி செய்யும் இரண்டாவது பெரிய நாடாக இருக்கிறது. இப்படி இருக்கும் போது ஏன் இப்போது இந்தியாவைத் தேர்வு செய்கிறார்கள் கம்பெனிகள்?
காரணம் 1 - புதிய வாடிக்கையாளர்கள்
2019-ம் ஆண்டு கணக்கு படி, உலக அளவில், உற்பத்தி செய்யப்படும் செல்போன்களில் 15 கோடி செல்போன்கள் இந்தியாவில் விற்பனை ஆகி இருக்கின்றன. உலகிலேயே இரண்டாவது பெரிய செல்போன் சந்தை என்றால் அது இந்தியா தான். இன்னமும் இந்தியாவில் 35 கோடி பேர் ஸ்மார்ட்ஃபோன்களை வாங்காமல் இருக்கிறார்கள்.
காரணம் 2 - ஸ்மார்ட்ஃபோன் ஆயுட்காலம்
அதோடு இந்தியாவில் பொதுவாக ஒரு ஸ்மார்ட்ஃபோனின் ஆயுட்காலம் 2 வருடங்களாக மட்டுமே இருக்கிறது. புதிதாக ஸ்மார்ட்ஃபோன் வாங்குபவர்கள் & பழைய ஸ்மார்ட்ஃபோனை மாற்றுபவர்களால், இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோன் வியாபாரம், அடுத்த பல ஆண்டுகளுக்கு அமோகமாக நடக்கும் என்கிற நம்பிக்கையில் தான் இந்தியாவில் கடை விரிக்கிறார்கள்.
காரணம் 3 - சீனாவின் ஆதிக்கம்
இந்த ஜூன் 2020 காலாண்டு நிலவரப் படி, இந்தியவின் மொத்த ஸ்மார்ட்ஃபோன் சந்தையில், சியாமி, விவோ, ஓப்போ, ரியல் மீ போன்ற சீன கம்பெனிகள் 75.1 % சந்தையை கையில் வைத்திருக்கிறார்கள் என்கிறது Canalys தரவுகள். அதன் பிறகு சாம்சங் 16.8 % வைத்திருக்கிறார்கள். பாக்கி இருக்கும் 8.1 சதவிகிதத்தில் தான் ஆப்பிள் நிறுவனமே வருகிறது.
மற்ற நிறுவனங்கள்
அப்படி என்றால், இந்திய நிறுவனங்களான மைக்ரோமேக்ஸ், லாவா போன்ற கம்பெனிகளுக்கு எல்லாம் என்ன சந்தை இருக்கும் என நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். இந்த சீன புறக்கணிப்பு உணர்வை பயன்படுத்தி வியாபாரத்தை பெருக்கலாம் என்கிற எதிர்பார்ப்பு சாம்சங் தொடங்கி மைக்ரோமேக்ஸ் வரை பல கம்பெனிகளுக்கும் இருக்கின்றன. ஆகையால் இந்தியாவுக்கு ஓகே சொல்கிறார்கள்.
காரணம் 4 - அமெரிக்க சீன பிரச்சனை & இந்திய நில அமைப்பு
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான புகைச்சல், இப்போதைக்கு முடியும் எனத் தோன்றவில்லை. எனவே, சீனாவில் கடை விரிப்பது கம்பெனிகளுக்கு எதிர்காலத்தில் சிக்கலை உண்டாக்கலாம். எனவே சீனா வேண்டாம் என இந்தியா & வியட்நாமைத் தேர்வு செய்கிறார்கள். அதோடு, இந்தியாவில் இருந்து ஆப்பிரிக்கா & மத்திய கிழக்கு நாடுகளுக்கு போக்குவரத்தும் எளிதாக இருக்கிறதாம். இதுவும் செல்போன் கம்பெனிகள் இந்தியாவை டிக் அடிக்க மிக முக்கிய காரணமாகப் பார்க்கின்றன கம்பெனிகள்.
சீனாவுக்கு நெருக்கடி
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 20 கோடி செல்போன் அசெம்பிளிங் வேலை வாய்ப்புகளை, சீனா, இந்தியாவிடமும், வியட்நாமிடமும் பறி கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த பி எல் ஐ திட்டம் வழியாக, கம்பெனிகள், அதிகம் இந்தியா பக்கம் திரும்புவதால், சீனாவில் ஸ்மார்ட்ஃபோன் உற்பத்தி சார்ந்த வேலை வாய்ப்புகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் மேலும் அடி வாங்க நிறைய வாய்ப்பு இருக்கிறது.