விவசாயிகளுக்கு மத்திய அரசு எண்ணற்ற நல்ல திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் அவர்களுடைய சிறு நிதி தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக கொண்டுவரப்பட்ட திட்டம் தான் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டம் (PM - கிசான்). இந்தத் திட்டம் எண்ணற்ற விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இன்னும் வெகுவிரைவில் பிஎம் கிசான் திட்டத்தின் தவணைத் தொகை வரவிருக்கிறது. இதை எதிர்பார்த்து விவசாயிகளும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த திட்டம் தான் பிஎம் கிசான். இந்தத் திட்டத்தில் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த முறை 22-வது தவணை மார்ச் 13-ஆம் தேதி அன்று வரவு வைக்கப்பட்டது. வழக்கமாக பணம் வழங்கப்பட்ட அட்டவணையின் படி பார்த்தால் இந்த முறை, 23 வது தவணை ஜூன் மாதம் அல்லது ஜூலை மாதத்தில் கணக்கில் வந்து சேர வேண்டும்.
ஏற்கனவே ஜூன் மாதத்தின் 2-வது அல்லது 3-வது வாரத்தில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. அதே எதிர்பார்ப்பு தற்போதும் நிலவி வருகிறது. ஆனால் மத்திய அரசின் சார்பில் இன்னும் அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்படவில்லை. பிஎம் கிசான் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரையில் 22 தவணைகள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் என்ன செய்ய வேண்டும்?: பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் நிதி உதவி பெறுவதற்கு ஒவ்வொரு விவசாயியும் ஈ-கேஒய்சி செயல்முறையை முடித்திருக்க வேண்டும். அதோடு உங்களுடைய ஆதார் விவரங்கள், வங்கிக் கணக்கோடு இணைக்கப்பட்டிருக்கிறதா? என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதை செய்ய தவறினால் ரூ.2000 தவணைத் தொகை பெறுவதில் தாமதம் ஏற்படலாம் அல்லது பட்டியலில் இருந்து உங்கள் பெயர் நீக்கப்படவும் வாய்ப்புள்ளது.
நீங்கள் ஈ-கேஒய்சி பூர்த்தி செய்ய 3 வெவ்வேறு வழிகளைப் பயன்படுத்தலாம். உங்கள் மொபைல் நம்பருக்கு அனுப்பப்படும் ஓடிபி மூலமாக நீங்களாகவே ஈ-கேஒய்சி செயல்முறையை முடிக்கலாம், அல்லது அருகில் உள்ள காமன் சர்வீஸ் சென்டருக்கு சென்று உங்களுடைய கைரேகை மூலம் ஈ-கேஒய்சி பதிவு செய்யலாம், முக அங்கீகார அடிப்படையிலும் முகத்தை ஸ்கேன் செய்து ஈ-கேஒய்சி செயல்முறையை முடிக்கலாம்.
பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை எப்படி சரி பார்ப்பது?:
ஸ்டெப் 1:முதலில் பிஎம் கிசான் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நுழைந்து கொள்ளுங்கள்.
ஸ்டெப் 2: அங்கு "Beneficiary Status" என்ற ஒரு பக்கம் இருக்கும் அந்த பக்கத்திற்கு செல்லுங்கள். அதில் உங்களுடைய அக்கவுண்ட் விபரங்களைச் சரி பார்ப்பதற்கான பக்கமும் இருக்கும். அந்தப் பக்கத்தில் உங்களுடைய அக்கவுண்ட் நம்பர் மற்றும் அடையாள எண்ணை வழங்க வேண்டும்.
ஸ்டெப் 3: விவரங்களை எல்லாம் வழங்கிய பிறகு "கெட் டேட்டா" என்ற பட்டனைக் கிளிக் செய்தால் போதும். இப்போது திரையில் தவணை பணம் அனுப்பப்பட்ட விவரங்கள் தெளிவாக காண்பிக்கப்படும்.
மழைக்காலம் தொடங்க இருப்பதால் இது போன்ற நிதி உதவி சிறு குறு விவசாயிகளுக்கு கண்டிப்பாக உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. எனவே பிஎம் கிசான் திட்டத்தின் முழு நிதியுதவியையும் பெற உங்கள் பெயர் இருக்கிறதா? என்பதை சரி பார்ப்பதோடு இ-கேஒய்சி செயல்முறையையும் விரைவில் முடித்துக் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications