சர்வதேச டெக்ஸ்டைல் சந்தையில் இந்தியாவை முக்கியப் பகுதியாக மாற்ற வேண்டும் என்பதற்காக மத்திய அரசு அறிவித்த பிரதான் மந்திரி மித்ரா திட்டத்திற்கு இன்று நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
இப்புதிய திட்டத்தின் மூலம் இந்தியாவில் புதிதாக 7 மெகா டெக்ஸ்டைல் பூங்கா-வை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் டெக்ஸ்டைல் துறையில் அன்னிய முதலீட்டை ஈர்ப்பது மட்டும் அல்லாமல் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் என மத்திய அரசு நம்புகிறது.
அடுத்த 5 வருடத்தில் 7 Mega Integrated Textile Region and Apparel (PM-MITRA) பூங்காவை உருவாக்கும் 4,445 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு இன்று நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது
உற்பத்தி மற்றும் ஏற்றுமதி
இந்தியாவில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பல முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் இந்திய டெக்ஸ்டைல் துறையை உலக அரங்கிற்குக் கொண்டு செல்லும் விதமாக PM-மித்ரா திட்டத்தை உருவாக்கியுள்ளது.
7 டெக்ஸ்டைல் பார்க்
இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் 7 டெக்ஸ்டைல் பார்க் ஒவ்வொன்றுக்கும் மத்திய அரசு 500 கோடி ரூபாய் அல்லது மொத்த திட்டத்தின் விலையில் 30 சதவீதம் தொகையில் எது அதிகமாக உள்ளதோ அந்தத் தொகையை மத்திய அரசு அளிக்க முடிவு செய்துள்ளது.
தனியார் முதலீடு
இதன் மூலம் தனியார் அமைப்புகளும் புதிய தொழிற் பூங்காவை அமைக்க ஆர்வம் காட்டுவது மட்டும் அல்லாமல் அதிகளவிலான தொகையை முதலீடு செய்ய முன்வரும். இதன் மூலம் நாட்டின் டெக்ஸ்டைல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அதிகரிக்க உள்ளது.
PM-மித்ரா திட்டம்
PM-மித்ரா திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் 7 டெக்ஸ்டைல் பார்க்கும் உற்பத்தி தொழிற்சாலை, சாலை, மின்சாரம், தண்ணீர் மற்றும் கழிவு திட்டம், வீட்டு மற்றும் விடுதி சேவைகள் உட்பட அனைத்தும் உருவாக்கப்பட உள்ளது. இதோடு இத்திட்டத்தின் ஒரு பகுதியாக டெக்ஸ்டைல் ஊழியர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.
இந்திய டெக்ஸ்டைல் துறை
இந்தியாவில் டெக்ஸ்டைல் துறை ஒரு பகுதியில் இல்லாமல் பெரிய அளவில் விரிந்துள்ளது. பருத்தி குஜராத் மற்றும் மகாராஷ்டிரா பகுதியில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது, தமிழ்நாட்டில் ஸ்பின்னிங், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் பிராசிங் செய்யப்படுகிறது. இதைத் தொடர்ந்து NCR, பெங்களூர், கொல்கத்தாவில் இருந்து பிற பொருட்கள் திரட்டப்படுகிறது. மும்பை மற்றும் கொல்கத்தாவில் இருந்து அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மாநில அரசு
PM-மித்ரா திட்டத்திற்காக மத்திய அரசு 6ஆம் தேதி மாநில அரசுகளை ஏற்கனவே டெக்ஸ்டைல் உற்பத்தி தளம் இருக்கும் இடத்திற்கு அருகில் 1000 ஏக்கர் கிரீன்பீல்டு மற்றும் பரிவுன்பீல்டு நிலம் வேண்டும் எனக் கோரிக்கை வைத்தது.
தமிழ்நாடு
மத்திய அரசின் கோரிக்கையை ஏற்றுத் தமிழ்நாடு, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுகள் தன் மாநிலத்தில் டெக்ஸ்டைல் பூங்காவை அமைக்க விருப்பம் தெரிவித்து நில விபரங்களை மத்திய அரசுடன் பகிர்ந்துள்ளது.
2.1 லட்சம் வேலைவாய்ப்புகள்
மத்திய அரசு இந்த 7 டெக்ஸ்டைல் பூங்காவை PPP திட்ட வடிவத்தில் மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து உருவாக்க உள்ளது. அடுத்த 5 வருடத்தில் இத்துறையில் மட்டும் சுமார் 2.1 லட்சம் வேலைவாய்ப்புகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் உருவாக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.
ஏற்றுமதி
இந்தியாவில் டெக்ஸ்டைல் ஏற்றுமதி அளவீடுகள் 2021-22 நிதியாண்டில் 44 பில்லியன் டாலர் அளவீட்டை எட்டும், ஆனால் PM-மித்ரா திட்டத்தின் மூலம் அடுத்த 5 ஆண்டில் டெக்ஸ்டைல் ஏற்றுமதி அளவீடு 100 பில்லியன் டாலர் அளவீட்டை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வர்த்தக மற்றும் டெக்ஸ்டைல் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கு என்ன கிடைக்கும்..?
இந்திய டெக்ஸ்டைல் துறையில் தமிழ்நாடு முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில் தமிழ்நாட்டில் கட்டாயம் ஒரு டெக்ஸ்டைல் பார்க் வரும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டின் வர்த்தகம், வேலைவாய்ப்பு, உற்பத்தி சந்தை பெரிய அளவில் விரிவாக்கம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.