2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (ஜன.29) பட்ஜெட் கூட்டத்தொடர் கூட்டம் துவங்கியுள்ளது. எப்போதும் போலவே ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்றத்தின் இரு அவைகள் முன்னிலையில் உரையாற்றிப் பட்ஜெட் கூட்டத்தைத் துவங்கி வைத்தார்.
இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கும் முன் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த 10 வருடத்தில் இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பான வளர்ச்சியை அடையவும், மிகவும் சிறப்பான எதிர்காலம் காத்திருப்பதாக நம்புகிறேன் எனத் தெரிவித்தார்.
இதேவேளையில் 2020ஆம் ஆண்டில் கொரோனா வைர்ஸ் தொற்று மற்றும் லாக்டவுன் அறிவிப்பால் ஏற்பட்ட பொருளாதாரத்தை மேம்படுத்த 4 -5 மினி பட்ஜெட் போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. பல துறைகளுக்காகச் சிறப்பு வளர்ச்சி திட்டங்களைப் பல பகுதிகளாக அறிவிக்கப்பட்டது என மோடி தெரிவித்தார்.
இதன் முலம் வர்த்தகச் சந்தை மற்றும் மக்களின் தேவைகளை மத்திய அரசு பூர்த்தி செய்துள்ளது என மோடி தெரிவித்தார். மேலும் இதுபோன்ற மினி பட்ஜெட்டை அறிவிக்கும் திட்டம் தொடர வேண்டும் எனவும் தான் விரும்புவதாகப் பிரதமர் தெரிவித்தார்.
இதேவேளையில் வேலைவாய்ப்புச் சரிவு, பொருளாதார நெருக்கடி மற்றும் விவசாயிகள் போராட்டம் ஆகியவற்றை முன்வைத்து ஜனாதிபதி உரையை 19 எதிர்க் கட்சிகள் இணைந்து புறக்கணிப்பு செய்துள்ளது. இதனால் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கும் போதே நாடாளுமன்றத்தில் சலசலப்பு நிலவியது.