மத்திய அரசு நாட்டு மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்து வருகிறது. அந்த வகையில் 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது தான் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) என்ற திட்டம். தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அல்லது ஏற்கனவே ஒரு தொழிலை சிரமப்பட்டு செய்து கொண்டிருப்பவர்கள் என அனைவரும் இந்த திட்டத்தின் மூலம் நிதியுதவி பெறலாம். சிறு தொழில் முனைவோர், சுய தொழில் செய்பவர்களுக்கு அரசு தொடங்கிய முன் முயற்சிகளில் இந்தத் திட்டமும் ஒன்று.
ஆனால் முத்ரா திட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களோ அல்லது விவசாயிகளோ பலன் பெற முடியாது. ஏனெனில் அவர்களுக்கு ஏற்கனவே வேறு திட்டங்கள் வழங்கப்படுகிறது. சாமானியர்களும் வரும் காலத்தில் பெரிய தொழில் முனைவோராக மாற வேண்டும் என்பதற்காக அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்தது. முத்ரா திட்டத்தின் கீழ் மூன்று பிரிவுகளின் கீழ் கடன் வழங்கப்படுகிறது. முதலாவதாக சிஷு, இந்தப் பிரிவின் கீழ் 50,000 வரை கடன் பெற முடியும். மற்றொன்று கிஷோர் பிரிவு, இதன் கீழ் ரூ.5,000 முதல் ரூ.5 லட்சம் வரை கடன் பெற முடியும். தருண் பிரிவின் கீழ் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். ஒருவேளை நீங்கள் ரூ.10 லட்சம் கடன் பெற்று அதை சரிவர திருப்பிச் செலுத்தி விட்டால் மீண்டும் ரூ.10 லட்சம் பெற்றுக் கொள்ளலாம்.

முத்ரா கடன் எங்கு வழங்கப்படுகிறது?: முத்ரா கடன் வங்கிகள், கிராமப்புற வங்கிகள், சிறுநிதி நிறுவனங்கள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் போன்றவற்றில் வழங்கப்படுகிறது.
தற்போதைய சூழலில் ஐடி உலகம் மந்த நிலையில் இருப்பதை பார்க்கிறோம். இது போன்ற காலகட்டத்தில் வேறொரு வேலையை எதிர்பார்த்து காத்திருக்காமல் சுயமாக முன்வந்து தொழில் தொடங்க வேண்டும் என்பதற்காகவே இத்தகைய திட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன.
யார் முத்ரா கடன் பெற விண்ணப்பிக்கலாம்?: சிறு கடை உரிமையாளர்கள், வியாபாரிகள் உற்பத்தியாளர்கள், தொழில் முனைவோர், சுய தொழில் செய்பவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
முத்ரா திட்டத்தின் சிறப்பம்சம் என்ன?: வேறு எங்கு சென்று கடன் கேட்டாலும் அதற்கு பிணயமாக நகை அல்லது பத்திரத்தை வழங்க வேண்டும். ஆனால் முத்ரா கடனை பொறுத்தவரையில் நீங்கள் பிணயமாக எதையும் வழங்கத் தேவையில்லை. உங்களுடைய தொழில் என்ன? என்பதற்கான ஆவணங்கள்.. சான்றாக எதிர்காலத்தில் உங்கள் தொழிலின் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கும்? போன்ற சில முக்கியமான ஆவணங்களை மட்டுமே சமர்ப்பித்தால் போதுமானது.
எப்படி லோன் பெறுவது?: நீங்கள் வங்கிகளுக்கு சென்று முத்ரா கடன் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதை பிற ஆவணங்களோடு சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். அதாவது உங்களுடைய அடையாளச் சான்று, போட்டோ, உங்கள் தொழிலுக்கு என்னென்ன உபகரணங்கள் வாங்கி இருக்கிறீர்கள் என்பதற்கான ரசீதுகள் அனைத்தையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். இதன் முக்கிய நன்மை என்ன தெரியுமா? நீங்கள் முத்ரா கார்டு மூலம் எவ்வளவு தொகையை செலவு செய்திருக்கிறீர்களோ, அதற்கு மட்டும் வட்டி செலுத்தினால் போதுமானது மீதம் கார்டில் இருக்கும் தொகைக்கு வட்டி செலுத்த தேவையில்லை.


Click it and Unblock the Notifications