அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி மூன்று நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மோடி, இன்று ஜப்பான் பிரதமர் யோஷிகிடே சுகா, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இதனைத் தொடர்ந்து இந்திய வம்சாவளியை சார்ந்தவர்களான அடோப்பின் சிஇஓ சாந்தனு நாராயண் மற்றும் ஜெனரல் ஆடோமிக்ஸ் நிறுவனத்தின் விவேக் லால், உள்ளிட்ட 5 நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்துப் பேச உள்ளார்.
கமலா ஹாரீஸ் - ஜோ பைடனுடன் சந்திப்பு
இதையடுத்து அமெரிக்க துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸூடனும் சந்திப்பு நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவுக்கான வாய்ப்புகள், அறிவியல், தொழில்நுட்பத்துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என தெரிகின்றது.
இதனையடுத்து வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கும் பிரதமர், குவாட் மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளார். இது தவிர நியூயார்க்கில் ஐநா பொது சபைக் கூட்டத்திலும் உரையாற்றவுள்ளார்.
யாரந்த 5 சிஇஓ-க்கள்
பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவுள்ள 5 தலைமை செயல் அதிகாரிகளில் இருவர் இந்திய வம்சாவளியை சார்ந்தவர்கள். ஒருவர் அடோப்பின் சிஇஓ சாந்தனு நாராயண் மற்றும் ஜெனரல் ஆடோமிக்ஸ் நிறுவனத்தின் விவேக் லால், குவால்காமின் கிறிஸ்டியானோ இ அமோன், பர்ஸ்ட் சோலாரின் மார்க் விட்மர், பிளாக்ஸ்டோன் தலைவர் ஸ்டீபன் ஏ ஸ்வார்ஸ்மேன் ஆகியோரை சந்திக்க உள்ளார்.
டிஜிட்டல் வளர்ச்சிக்கு முக்கியத்துவம்
இந்த ஐந்து உயர் அதிகாரிகளும் ஐந்து முக்கிய துறைகளை சேர்ந்தவர்கள் என்பதால், இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதில் அடோப்பின் சிஈஓ சாந்தனு நாராயண் உடனான சந்திப்பானது ,ஐடி மற்றும் டிஜிட்டல் துறையின் முன்னெடுப்பினை காட்டுகின்றது.
ட்ரோன் உற்பத்தியாளர்
ஜெனரல் அடாமிக்ஸ் நிறுவனத்தின் விவேக் லால் சந்திப்பும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது. இது அணுசக்தி இராணுவ ட்ரோன் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக மட்டும் அல்லாமல், உலகின் அதிநவீன இராணுவ ட்ரோன்களின் முன்னணி உற்பத்தியாளராகும். இந்தியா தனது இராணுவ பலத்தினை மேம்படுத்தும் விதமாக அமெரிக்காவிடம் இருந்து ட்ரோன்களை வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
ஜெனரல் அடாமிக்ஸ் உடன் ஒப்பந்தம்
மேலும் ஜெனரல் அடாமிக்ஸிடம் சில ட்ரோன்களை, இந்தியா குத்தகைக்கும் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஜெனரல் அடாமிக்ஸூடன் 18 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இரு தரப்பு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது நினைவுக்கூறத்தக்கது. இதன் மூலம் மேற்கோண்டு அமெரிக்காவும் இந்தியாவும் பாதுகாப்பு உறவில் மேலும் பலப்படும்.
குவால்காம் உடனான சந்திப்பு
குவால்காமின் கிறிஸ்டியானோ இ அமோன் உடனான சந்திப்பில் 5ஜி தொழில்நுட்பம் பற்றிய விவாதம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனம் செமிகண்டக்டர்கள், சாப்ட்வேர், வயர்லெஸ் டெக்னாலஜி உள்ளிட்ட அம்சங்களை உற்பத்தி செய்து வருகின்றது.
5ஜி தொழில்நுட்பம் பற்றிய பேச்சு வார்த்தை
30 ஆண்டுகளுக்கும் மேலாக வயர்லெஸ் டெக்னாலஜியில் உலகத் தலைவராக இருக்கும் குவால்காம், தற்போது 5ஜி-யிலும் முன்னோடியாக இருந்து வருகின்றது. தற்போது இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தினை மேம்படுத்த குவால்காம் இந்தியாவில் பெரியளவில் முதலீட்டினை இந்தியா எதிர்பார்க்கின்றது என பிடிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோலார் பற்றிய பேச்சு வார்த்தை
இந்தியாவில் தற்போது சோலார் தேவையை பூர்த்திய செய்ய, பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ஆக மார்க் விட்மருடனான இந்த சந்திப்பும் முக்கியமானதாக இருக்கலாம். இது சோலார் ஆற்றல் உற்பத்தி மற்றும் இது குறித்தான பேச்சு வார்த்தைகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிளாக்ஸ்டோன் அதிகாரி
உலகின் முன்னணி முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான பிளாக்ஸ்டோனின் தலைமை அதிகாரியான ஸ்டீபனுடனான சந்திப்பு, இந்தியாவில் முதலீடுகள் பற்றியதாக இருக்கலாம் என தெரிகிறது.