டெல்லி: மறைந்த பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் விஜயராஜே சிந்தியா நினைவாக 100 ரூபாய் நாணயத்தை, இன்று (அக்டோபர் 12) பிரதமர் மோடி வெளியிட்டார்.
பாஜகவின் முன்னோடியான ஜன சங்கத்தை நிறுவிய தலைவர்களில் ஒருவர் விஜயராஜே சிந்தியா. 1919, அக்டோபர் 12ல் பிறந்தவர். அவர் 2001 ஜனவரி, 25ல் மறைந்தார். இந்த நிலையில் விஜயராஜேவின் 100 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, இன்று அவரது நினைவாக 100 ரூபாய் நாணயத்தினை வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
இந்த கூட்டத்தில் விஜயராஜே குடும்பத்தினர் மற்றும் விருந்தினர்கள் பலரும், பல்வேறு இடங்களில் இருந்து வீடியோ கான்ப்ரன்சிங் மூலம் கலந்து கொண்டனர்.
முக்கிய அரசியல்வாதி
அதோடு இந்த விழாவில் பேசிய நரேந்திர மோடி, இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு, பல தசாப்தங்களாக, இந்தியாவின் முக்கிய அரசியல் வாதிகளில் ஒருவராக இருந்தவர் விஜயராஜே. கடந்த 60 ஆண்டுகளில் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவர். அவர் தீர்க்கமான, திறமையான தலைவர். அவர் ஏழை எளிய மக்களுக்காக பணியாற்றிவர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
விஜயராஜேவின் வரலாறு
மத்திய பிரதேசத்தில் உள்ள சாகரில் பிறந்தவர். இவர் தாகூர் மகேந்திர சிங், அவரது மனைவி சுதா தேவஸ்வரி தேவிக்கும் மூத்த மகளாக பிறந்தவர். அவருக்கு ஆரம்பத்தில் லேகா திவ்யேஸ்வரி தேவி என்று பெயரும் சூட்டப்பட்டது. அந்த சமயத்தில் விஜயராஜேவின் தந்தை துணை கலெக்டராக இருந்தார். சிறு வயதிலேயே பல கஷ்டங்களை அனுபவித்த விஜயராஜே, அவரது தாய்வழி தாத்தாகளின் வீட்டில் தான் வளர்க்கப்பட்டாராம்.
கல்வித் தகுதி
எனினும் விஜயராஜே தரமான கல்வியை அந்த சமயத்தில் பெற்றுள்ளார். ஆரம்பத்தில் வீட்டில் இருந்தே கல்வி கற்ற லேகா திவ்யேஸ்வரி, பின்னர் கல்லூரி படிப்பினையும் பயின்றுள்ளார். ஏற்கனவே தனது பாட்டியின் குணத்தால் ஈர்க்கப்பட்ட லேகா திவ்யேஸ்வரி, கல்லூரி படிக்கும் காலத்திலேயே வெளி நாட்டு பொருட்கள் மற்றும் துணிகளை பயன்படுத்துவதை தவிர்த்துள்ளார்.
பெயர் மாற்றம்
இதனையடுத்து பிப்ரவரி 1941ல், அவரின் 22ம் வயதில் குவாலியரின் மகாராஜாவின் ஜிவாஜிராவ் சிந்தியாவை, லேகா திவ்யேஸ்வரி திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த சமயத்தில் தான் இவருக்கு ஜாதக பொருத்தத்தின் அடிப்படையில் விஜயராஜே சிந்தியா என்றும் பெயரிடப்பட்டதாக கூறப்படுகிறது.
பாஜக தலைவர்
ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்த விஜயராஜே, பிறகு தான் பாஜகாவில் சேர்ந்துள்ளார். 1991, 1996, 1998ம் ஆண்டுகளில் தொடர்ந்து தனது இடத்தினை தக்க வைத்துக் கொண்டவர். 1998 வரையில் பாஜகவின் தலைவராக இருந்தவர், கடந்த 2001ல் இறந்துள்ளார். கடந்த 2001ல் விஜயராஜே சிந்தியா பெயரில் இந்திய அரசு தபால் தலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.