சென்னை போன்ற பெரு நகரங்களில் வசிப்பவர்களுக்கு டிராஃபிக் என்றாலே தலைசுற்றும். காலை , மாலை என பள்ளி கல்லூரிகளுக்கு செல்வது அலுவலகம் சென்று வருவது என்றாலே அய்யயோ டிராஃபிக்கில் சிக்கிவிடுவோமோ என்ற அச்சம் உண்டாகும். இந்த போக்குவரத்து நெரிசல் பிரச்சினையில் இருந்து சென்னை மக்களை காப்பாற்றியது மெட்ரோ ரயில்கள் தான்.
மெட்ரோல் ரயில்கள் மூலம் நாம் எந்த ஒரு டிராஃபிக்கிலும் சிக்காமல் வேகமாக நாம் நினைத்த இடத்திற்கு சென்று விட முடிகிறது. அந்த வகையில் சென்னை மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருக்கும் வடபழனி - பூந்தமல்லி பைபாஸ் இடையிலான மெட்ரோ ரயில் வழித்தடத்தில் எப்போது ரயில் சேவை தொடங்கும் என்ற முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை வடபழனி - பூந்தமல்லி இடையிலான 14.6 கி.மீ நீளமுள்ள புதிய மெட்ரோ ரயில் வழித்தடத்தை ஜூலை மாதம் இரண்டாம் அல்லது மூன்றாம் வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியின் படி ஜூலை மாதம் பிரதமர் மோடி வந்துமெட்ரோ சேவையை தொடங்கி வைத்த உடன். இந்த வழித்தடத்தில் வழக்கம் போல ரயில்கள் இயக்கம் தொடங்கும்.
இந்த வழித்தடம் செயல்பாட்டுக்கு வருவதன் மூலம், தற்போது பூந்தமல்லியிலிருந்து வடபழனி வரை பயணம் செய்ய சுமார் 90 நிமிடங்கள் ஆவதற்குப் பதிலாக, இனி வெறும் 30 நிமிடங்களில் சென்றடைய முடியும். இது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் (Phase II, Corridor IV) ஒரு பகுதியாகும். வடபழனியில் உள்ள தற்போதைய பச்சை வழித்தடத்துடன் அதாவது சென்ட்ரல் முதல் செயிண்ட் தாமஸ் மவுண்ட் வரையிலான பாதையுடன் இணைக்கப்படும்.
தொடக்கத்தில் பூந்தமல்லி பைபாஸிலிருந்து புறப்படும் மெட்ரோ ரயில்கள் போரூர் வரையுள்ள அனைத்து நிலையங்களிலும் நிற்கும். அதன் பிறகு வடபழனி வரை இடையில் உள்ள ஆறு நிலையங்களில் நிற்காமல் நேரடியாகச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ சேவை பயன்பாட்டுக்கு வந்துவிட்டால் பூந்தமல்லி முதல் போரூர், வடபழனி வரையிலான வழித்தடத்தில் மக்கள் அதிகம் மெட்ரோவை பயன்படுத்த தொடங்குவார்கள் என்பதால் சாலை போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது.
இந்த மெட்ரோ சேவை தொடங்கிய பின்னரே, குத்தம்பாக்கத்தில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து முடிவு செய்யப்படும் என அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த மெட்ரோ ரயில் சேவை சென்னைவாசிகளின் பயண நேரத்தைக் குறைப்பதிலும், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கும்.


Click it and Unblock the Notifications

