உலக அளவில் பேர் போன பஞ்சாப் நேஷனல் பேங்க் ஊழல் நீரவ் மோடியின், ஜாமீன் மனுவினை லண்டன் உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்தியாவில் இருந்து லண்டனுக்கு தப்பி ஓடிய மோசடி மன்னன் தான் நிரவ் மோடி, லண்டனில் கைது செய்யப்பட்டார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் கடன் உத்திரவாத கடிதங்களை வங்கி ஊழியர்கள் உதவியுடன் மோசடியாக பெற்ற வைர வியாபாரியான நிரவ் மோடி, கடந்த 2011ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை வெளிநாடுகளில் உள்ள வங்கி கிளைகளில் தனது நிறுவனத்திற்காக சுமார் 13,000 கோடி ரூபாய் வரை கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில் மோசடி குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது தெரியவந்ததும், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நிரவ் மோடி லண்டனுக்கு தப்பிச் சென்று விட்டார்.
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நிரவ்மோடிக்கு சொந்தமான 1720 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன. கடந்த வாரம் நிரவ் மோடி உள்ளிட்டோர் மீது கூடுதல் குற்றப் பத்திரிகையை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.
இந்த நிலையில் நிரவ் மோடி லண்டனில் தஞ்சமடைந்திருப்பதும், லண்டன் வீதிகளில் அவர் உல்லாசமாக சுற்றித் திரியும் காட்சிகள் வெளியானது. மேலும் அவர் லண்டனில் புதிதாக வைரம் விற்பனை நிறுவனத்தை அவர் தொடங்கியிருக்கிறார் என்றும் நாளிதழ் ஒன்று செய்தியை வெளியிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் பிரிட்டன் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கைக்கு பின், பிரிட்டன் உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்ததை அடுத்து, லண்டனில் காவல்துறையினர் நிரவ்மோடியை கைது செய்தனர்.
கிட்டதட்ட 2 பில்லியன் அமெரிக்க டாலர் பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி மற்றும் பணமோசடி செய்ததாக இந்தியா கூறி வரும் நிலையில், அவரது ஜாமீன் மனு மீண்டும் இன்று மறுக்கப்பட்டுள்ளது.