செபி என்று சுருக்கமாக கூறப்படும் இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் 11 முக்கிய அதிகாரிகளின் அதிகாரபூர்வ மின்னஞ்சல் ஹேக் செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஹேக் சம்பவம் மூலம் பெரிய தவறுகள் நடைபெறவில்லை என்றும் எந்த இழப்பும் ஏற்படவில்லை என்றும் செபி விளக்கம் அளித்துள்ளது.
இருப்பினும் இது குறித்து செபி அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
மின்னஞ்சல் ஹேக்
செபி அமைப்பின் 11 அதிகாரிகளின் அதிகாரபூர்வ மின்னஞ்சல் கணக்குகள் திடீரென ஹேக் செய்யப்பட்டதாகவும், அறியப்படாதவர்கள் செய்த இந்த ஹேக் காரணமாக 11 அதிகாரிகளின் மின்னஞ்சல் கணக்குகள் மூலம் 34 மின்னஞ்சல்கள் மர்ம நபர்களால் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் செபி அதிகாரிகள் காவல் துறையிடம் புகார் கொடுத்துள்ளனர். இருப்பினும் முக்கியமான டேட்டாக்கள் எதுவும் ஹேக் செய்தவர்கள் திருடவில்லை என்று செபி அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
புகார்
மும்பை பாந்த்ரா-குர்லா வளாகத்தில் உள்ள செபியின் தலைமை அலுவலகத்தில் ஐடி துறையின் உதவி மேலாளரான வருண்குமார் கிஷன் கோபால் என்பவர் தனது மேலாளர் சந்திரகாந்த் என்பவரிடம் இருந்து புகாரை பெற்றதில், அந்த புகாரில் சந்திரகாந்த் தனது அதிகாரபூர்வ மின்னஞ்சல் ஐடியை அடையாளம் தெரியாத நபர்கள் பயன்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
11 மின்னஞ்சல் கணக்குகள்
மேலும் தனது மின்னஞ்சல் கணக்கில் இருந்து சில மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வந்ததை அடுத்து, பிற அதிகாரிகளின் மின்னஞ்சல்களை சோதனை செய்தபோது மொத்தம் 11 அதிகாரிகளின் மின்னஞ்சல் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதை கண்டறிந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
34 மின்னஞ்சல்கள்
இந்த நிலையில் ஹேக் செய்யப்பட்ட 11 செபி அதிகாரிகளின் மின்னஞ்சல் கணக்குகளில் இருந்து 34 மின்னஞ்சல்கள் ஹேக்கர்களால் அனுப்பப்பட்டுள்ளன என முதல் கட்ட விசாரணையில் போலீஸ் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 11 அதிகாரிகளின் மின்னஞ்சலை பயன்படுத்தி அவர்கள் யார் யாருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர் என்பது குறித்த தகவல்கள் போலீசார் திரட்டி வருவதாகவும் அவர்களிடம் விசாரணை செய்தால் இது குறித்து மேலும் சில விபரங்கள் கிடைக்கும் என்று கூறுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
ஹேக் செய்தவர் யார்?
மேலும் ஹேக்கர்களிடம் இருந்து மின்னஞ்சல் பெற்றவர்களுக்கு சில இணைப்புகள் இருந்ததாகவும் அந்த இணைப்புகளை கிளிக் செய்தால் ஹேக் செய்தவரின் தகவலை பெறலாம் என்றும் காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு நடவடிக்கை
இந்தநிலையில் 11 அதிகாரிகளின் மின்னஞ்சல்கள் ஹேக் செய்யப்பட்டதை அடுத்து பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவது உள்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக செபி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டேட்டாக்கள்
இது ஒரு சிறிய அசம்பாவித சம்பவம் தான் என்றும் முக்கிய டேட்டாக்கள் எதுவும் திருடப்படவில்லை என்றும் அதே நேரத்தில் பிரச்சினைக்கான மூல காரணம் கண்டறியப்பட்டு சரி செய்யப்பட்டு இருப்பதாகவும் செபியின் தலைமை பொது மேலாளர் ஹரிஹரன் அவர்கள் கூறியுள்ளார்.
வழக்குப்பதிவு
மேலும் இந்த ஹேக்கிங் தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 419 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 இன் 43 ஏ மற்றும் 66C போன்ற பிரிவுகளின் கீழ், வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.