தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகையாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்புடன் 3 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் வழங்குகிறது.
தமிழ்நாடு அரசின் இந்த பொங்கல் பரிசு தொகை அறிவிப்பு, கோடிக்கணக்கான மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி தந்திருக்கிறது. தற்போது பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் விநியோகம் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதனை அடுத்து ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேதி மற்றும் நேரத்தில் கடைக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசு தொகை 3000 ரூபாய் ரொக்கத்தை பெற்றுக் கொள்ளலாம்.

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தின் மூலம் பயனடைய இருக்கின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த திட்டத்தில் அதிகமாக பயனடைய போகக்கூடிய மாவட்டமாக சென்னை தான் இருக்கிறது. தமிழ்நாடு அரசின் பத்திரிகை தகவல் மையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி சென்னையில் 20 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகள் இருக்கின்றனர்.
சென்னையில் மட்டும் 20,97,560 பேர் தமிழ்நாடு அரசு வழங்கக்கூடிய இந்த பொங்கல் பரிசு தொகையை பெற இருக்கிறார்கள். அந்த வகையில் பொங்கல் பரிசு திட்டத்தில் அதிகம் பலனடையும் மாவட்டமாக சென்னை தான் இருக்கிறது. அடுத்ததாக இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது கோயம்புத்தூர் மாவட்டம். இங்கே 11,22,290 பயனாளிகள் பொங்கல் பரிசு தொகையை பெற உள்ளனர்.
இந்த பட்டியலில் அதிக பயனாளிகளோடு மூன்றாவது இடத்தை பிடித்திருப்பது சேலம் மாவட்டம். இங்கு மட்டும் 10,88,238 பயனாளிகள் பொங்கல் பரிசு தொகுப்பினை பெற இருக்கின்றனர். 9 லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகளுடன் மதுரை நான்காம் இடத்தில் உள்ளது. திருப்பூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்கள் இந்த பட்டியலில் 8 லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகளுடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளன.
திருவண்ணாமலை ,ஈரோடு ,தஞ்சாவூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 7 இலட்சத்திற்கும் அதிகமான பயனாளிகள் இருக்கின்றனர். திருவள்ளூர் ,கிருஷ்ணகிரி ,நாமக்கல் ,திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ,விருதுநகர் மாவட்டங்களில் 5 லிருந்து 6 லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகள் இருக்கின்றனர். மற்ற மாவட்டங்களில் ஐந்து லட்சத்திற்குள் தான் பயனாளிகள் இருக்கின்றனர்.
தமிழ்நாட்டிலேயே குறைந்தபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் தான் பொங்கல் பரிசு தொகை பெறுவதற்கான குறைந்தபட்ச பயனாளிகள் இருக்கின்றனர். இங்கு 1,93,920 பயனாளிகள் மட்டுமே பொங்கல் பரிசுத்தொகை பெறுபவர்களாக இருக்கின்றனர். தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் போதெல்லாம் குறைந்த வாக்குப்பதிவு பதிவாகும் மாவட்டமாக சென்னை இருக்கிறது. ஆனால் அரசின் திட்டங்கள் குறிப்பாக பொங்கல் பரிசு தொகை பெறும் பயனாளிகள் சென்னையில் அதிகமாக இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications