ரிஸ்க் எடுக்க பயப்படும் முதலீட்டாளர்களுக்கு நீண்ட காலமாக நல்ல வருமானத்தை வழங்கி வரும் திட்டம் பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் என்று சொல்லப்படுகிற பொது வருங்கால வைப்பு நிதி. இந்த திட்டத்தினை பிபிஎஃப் என்றும் அழைப்பார்கள். மத்திய அரசு வழங்கும் திட்டம் என்பதால் இதில் ஏராளமான முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருகின்றனர்.
பிபிஎஃப் திட்டத்தின் முக்கிய நன்மை என்ன தெரியுமா? நீங்கள் செய்யும் முதலீடு மற்றும் அதிலிருந்து கிடைக்கும் வட்டி ஆகிய இரண்டிற்குமே வரி இல்லை. ஆனாலும் ஒரு சிறு விஷயத்தை செய்தால் தான் முழு பலனையும் பெற முடியும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதிக்குள் பணத்தை சரியாக அக்கவுண்டில் வரவு வைக்க வேண்டும். ஏன் இப்படி சொல்லப்படுகிறது என்ற விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
பிபிஎஃப்: பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தை அதன் பாதுகாப்பு மற்றும் வருமான வரி சலுகைகளுக்காகவே பலர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். இதைத்தான் லாக்கின் காலம் என்று கூறுகிறோம். இந்த 15 ஆண்டுகளுக்கும் உங்களுடைய பணம் பிளாக் செய்யப்பட்டு இருக்கும். தேவைப்பட்டால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் 5 ஆண்டுகள் நீட்டித்துக் கொள்ளலாம்.

PPF திட்டத்திற்கு வட்டி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?: ஒவ்வொரு சேமிப்பு திட்டத்திற்கும் அரசு வட்டி எவ்வளவு என்பதை நிர்ணயித்திருக்கும். அந்த வகையில் பிபிஎஃப் திட்டத்திற்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் அவ்வப்போது திருத்தம் செய்யப்படும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31ஆம் தேதி அன்று உங்களுடைய வட்டி பிபிஎஃப் அக்கவுண்டில் வரவு வைக்கப்படும், ஆனால் மாத வாரியாக தான் வட்டி கணக்கிடப்படுகிறது, எனவே டெபாசிட் செய்யும் நேரம் என்பது மிக மிக முக்கியம்.
நீங்கள் ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதிக்குள் முதலீடு செய்துவிட்டால், அந்த மாதத்தின் வட்டி கணக்கீட்டில் உங்கள் டெபாசிட் சேர்க்கப்படும். ஒரு வேளை இந்தக் காலக்கெடுவைத் தவறவிட்டால் அந்த மாத வட்டியை இழக்க நேரிடும். நீங்கள் ஜூன் 1 முதல் 5-ஆம் தேதிக்குள் பணத்தை டெபாசிட் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போதுதான் ஜூன் மாதத்திற்கான வட்டி கிடைக்கும். இல்லை என்றால் ஜூலை மாதத்தில் இருந்து தான் வட்டி கணக்கிடப்படும்.
எனவே ஒவ்வொரு மாதமும் அந்த மாதத்தின் 5-ஆம் தேதிக்குள் முதலீடு செய்வது பிபிஎஃப் வருமானத்தை அதிகரிக்க உதவும். நீங்கள் PPF கணக்கில் ரூ.1.5 லட்சம் முதலீடு செய்து வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு மாதத்தின் ஐந்தாம் தேதி காலக்கெடுவை தவறவிட்டால் மீதமுள்ள 11 மாதங்களுக்கு மட்டும் தான் வட்டி கணக்கிடப்படும்.
ஒவ்வொரு மாதமும் ஒருவர் ரூ.12,500 என்ற கணக்கில் முதலீடு செய்தால் வருடத்திற்கு ரூ.1.5 லட்சம். இதுதான் இந்த திட்டத்தின் அதிகபட்ச முதலீட்டுத் தொகை. அதாவது ஒருவர் ரூ.1.5 லட்சத்திற்கும் மேல் பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்யவே முடியாது.
இவ்வளவு தொகை முடியாது என்று நினைப்பவர்கள் 500 ரூபாய் கூட முதலீடு செய்யலாம். இதுதான் இந்த திட்டத்தின் குறைந்தபட்ச முதலீடு. ஆக மாதம் ஒருவர் ரூ.12,500 என்ற தொகையை 5-ஆம் தேதிக்குள் வரவு வைக்க வேண்டும். அப்படி வைத்தால் அந்த 1 வருடத்திற்கு ரூ.1.50 லட்சம் என்ற கணக்கில், 7.1% வட்டி விகிதத்தில் மொத்தமாக 12 மாதங்களுக்கான 10,650 ரூபாய் வட்டி கிடைக்கும். அதுவே 5-ஆம் தேதிக்கு பிறகு வரவு வைத்தால் 11 மாதங்களுக்கு மட்டுமே வட்டி கணக்கிடப்பட்டு ரூ.9762.50 கிடைக்கும்.
எனவே பிபிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்பவர்கள், இதுபோன்ற சிறு சிறு விஷயத்தை கருத்தில் கொண்டால், நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வதன் முழுப் பலனையும் பெற முடியும்.


Click it and Unblock the Notifications