அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி என்டிடிவி நிறுவனத்தை வர்த்தக ரீதியில் வாங்கவில்லை, பொறுப்புக்காக வாங்கியதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் என்டிடிவி-யின் தலைவராக பிரணாய் ராய் தொடர்ந்து நீடிக்க வேண்டும் எனவும் அதானி அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால் அதானியின் அழைப்பினை மறுக்கும் விதமாக ஆர் ஆர் பி ஆர் (RRPR ) ஹோல்டிங் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இருந்து பிரணாய் ராய், அவரின் மனைவி ராதிகா ராய் இருவரும் ராஜினாமா செய்துள்ளனர்.
புதிய நியமனம்
இது குறித்து என்டிடிவி பங்கு சந்தைக்கு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிரணாய் ராய், ராதிகா ராய் ராஜினாமா செய்துள்ள அதே நேரம், சுதிப்தா பட்டாச்சார்யா, சஞ்சய் புகாலியா, செந்தில் சின்னையா செங்கல்வராயன் உள்ளிட்டோர் ஆர் ஆர் பி ஆர் குழுவில் இயக்குனர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஏன் இந்த நடவடிக்கை
ஆர் ஆர் பி ஆர் குழுவில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றமானது, என்டிடிவி-யில் ஆர் ஆர் பி ஆர் குழுமம் வைத்திருந்த 99.5% பங்கினை அதானி குழுமம் வெற்றிகரமாக கையகப்படுத்திய நிலையில் வந்துள்ளது.
என்டிடிவி-யின் புரோமோட்டர் வசம் இருந்த இந்த பங்கினை, அதானி குழுமத்திற்கு சொந்தமான விஸ்வபிரதான் கமர்ஷியல் (VCPL) நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.
கடனால் வந்த பிரச்சனை
என்டிடிவி நிறுவனத்தின் புரோமோட்டர் நிறுவனமான ஆர் ஆர் ஆர் பி நிறுவனத்திடம் வாங்கிய கடனுக்காக, கடந்த 2009 - 2010ல் ஒப்பந்தம் போடப்பட்டது. இவ்விரு நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் படி, என்டிடிவி-யின் 29.18% பங்குகள் ஆர் ஆர் பி ஆர் நிறுவனம் வசம் இருந்தது.
அதானி குழுமத்திற்கு உரிமை உண்டு
கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதியன்று அதானி குழுமத்தின் ஏ எம் ஜி மீடியா நெட்வொர்க்ஸ் நிறுவனம், விஷ்வபிரதான் கமர்ஷியல் நிறுவனத்தினை கையகப்படுத்தியது. ஆக இதன் மூலம் தான் அதானியின் வசம், 29.18% என் டி டி வி பங்குகள் வந்துள்ளன. இது நேரடியான பரிவர்த்தனை இல்லை என்றாலும், அதானி குழுமத்திற்கு உரிமை உண்டு என்ற நிலையில் இந்த பங்கு பரிவர்த்தனை நடந்துள்ளது.
தடையும் முடிந்தது?
எனினும் ஆரம்பத்தில் இதற்கு அதிருப்தி தெரிவித்த என்டிடிவி குழுமம், நீதிமன்றத்தை நாடியது. இதற்கிடையில் தான் என்டிடிவி-யின் பங்குகளை கையகப்படுத்த அதானி குழுமத்திற்கு செபி தடை விதித்து இருந்தது. நவம்பர் 26ம் தேதியுடன் செபியின் தடையானது முடிவடைந்த நிலையில், ஆர் ஆர் பி ஆர் நிறுவனம் என்டிடிவி புரோமோட்டர் பங்குகளை அதானிக்கு விற்பனை செய்துள்ளது.
அதானியிடம் எவ்வளவு பங்குகள்?
என்டிடிவி புரமோட்டர் பங்குகளில் 99.5% பங்குகளை அதானி குழுமத்தின் விபிசிஎல் நிறுவனத்திடம் விற்பனை செய்துள்ள நிலையில், அதானி குழுமத்திடன் என்டிடிவி நிறுவனத்தின் 29.18% பங்குகள் உள்ளன. இதோடு அதானி குழுமம் ஓபன் ஆபர் (Open offer) மூலம் 26% பங்குகளை வாங்குவதற்கு முயற்சித்து வருகிறது.
ஓபன் ஆஃபர் எப்போது முடிவு?
நவம்பர் 22ம் தேதி தொடங்கிய ஓபன் ஆபர் பங்கு விற்பனை மூலம், பங்குதாரர்கள் 5.3 மில்லியன் பங்குகளை அல்லது 31.78% இதுவரை பங்குகளை அதானி குழுமம் வாங்கியுள்ளது. இது இன்னும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஓபன் ஆஃபரில் பங்கின் விலை 294 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஓபன் ஆஃபரானது டிசம்பர் 5 உடன் முடிவடைகிறது
வெளியேற்றம்?
ஆரம்பத்தில் அதானியிடம் என்டிடிவி பங்குகளை விற்பனை செய்வதற்கு, என்டிடிவி தலைவர் பிரணாய் ராய் தயக்கம் காட்டி வந்தார். ஆனால் கடன் ஒப்பந்தத்தின் அடிப்படையில் என்டிடிவி பங்குகள் அதானி கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளன. இந்த நிலையில் தான் பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய் இருவரும் ஆர் ஆர் பி ஆர் குழுமத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். இதன் பிறகு பிரணாய் ராய் என்டிடிவி தலைவராக தொடருவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.