மத்திய அரசு விவசாயிகள், பெண்கள், தொழில் முனைவோர் என பிரித்துப் பிரித்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (Pradhan Mantri Matru Vandana Yojana - PMMVY) திட்டம். தாய்மையைப் போற்றுவோம் என்னும் இந்தத் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்தப் பதிவை படிக்கும் நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தினரோ கர்ப்பமாக இருந்தால் இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நிதியுதவி பெற எப்படி விண்ணப்பிப்பது?, யார் யார் தகுதியுடையவர்கள்?, எங்கு விண்ணப்பிக்க வேண்டும்? என்ற அனைத்து விவரங்களையும் இந்தப் பதிவில் பார்ப்போம். பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் என்பது இந்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் அரசு திட்டமாகும். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காகவே பிரத்தியேகமாக கொண்டுவரப்பட்டது. 2017-ஆம் ஆண்டின் ஜனவரி 1-ஆம் தேதி இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. அதிலிருந்து 9 ஆண்டுகளாக சிரமப்படும் கர்ப்பிணி பெண்களுக்கு உதவி வருகிறது.
தாய்மையை போற்றுவோம் என்று சொல்லப்படும் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் எவ்வளவு நிதி உதவி வழங்கப்படுகிறது?: கர்ப்பிணி பெண்களுக்கு முதல் குழந்தை பிறக்கும் போது ரூ.5,000 வழங்கப்படும். இந்த தொகை இரண்டு தவணைகளாக கொடுக்கப்படும். முதல் தவணையை பெற வேண்டுமானால் அதற்கு முறையாக பதிவு செய்திருப்பது அவசியம். லாஸ்ட் மந்த் பீரியட் (LMP) என்று சொல்லப்படுகிற உங்களுடைய கடைசி மாதவிடாய் தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள் ஒரு முறையாவது மகப்பேறு சென்று மருத்துவ பரிசோதனை செய்திருக்க வேண்டும்.

இந்தப் பரிசோதனையை உங்கள் ஏரியாவில் இருக்கும் அங்கன்வாடி மையங்கள் அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட சுகாதார மையங்களில் செய்து கொள்ளலாம். பரிசோதனை முடிந்த பிறகு முதல் தவணையாக ரூ.3,000 கர்ப்பிணி பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
அதன் பிறகு 2-வது தவணை குழந்தை பிறந்த பிறகு வழங்கப்படும். அதற்கு குழந்தையின் பிறப்பை முறையாக பதிவு செய்ய வேண்டும். பிறகு 14 வாரங்கள் வரை குழந்தைக்கு தேவையான அனைத்து தடுப்பூசிகளையும் போட்டிருக்க வேண்டும்.
இதில் அரசு மருத்துவமனை அல்லது பதிவு செய்யப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் நடந்திருந்தால் ஜனனி சுரக்ஷா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மொத்தமாக ரூ.6,000 வரை நிதியுதவி கிடைக்கும்.
2-வது குழந்தைக்கான நிதியுதவி?: இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ரூ.6,000 கூடுதல் நிதி உதவி வழங்கப்படும். இதன் மூலம் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணும் ஜனனி சுரக்ஷா திட்டத்தை சேர்க்காமல் மொத்தமாக ரூ.11,000 வரை நிதி உதவி பெற முடியும்.
தாய்மையை போற்றுவோம் திட்டத்திற்கு யார் யார் தகுதியுடையவர்கள்?: இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற குறைந்தபட்சம் 19 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அவர் கர்ப்பிணியாக இருந்து கர்ப்ப காலத்தில் வருமானம் அல்லது பிற வழிகளில் ஊதியம் இல்லாமல் இருப்பவராக இருக்க வேண்டும். அதோடு பின்வரும் பிரிவுகளை சேர்ந்த பெண்களும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியின பெண்கள், மாற்றுத்திறனாளிகள், வறுமைக்கோட்டிற்கும் கீழ் உள்ள பெண்கள், ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், ஈ-ஷ்ரம் கார்டு வைத்திருக்கும் பெண்கள், பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பெண் விவசாயிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் கார்டு வைத்திருக்கும் பெண்கள், குடும்ப வருமானம் ரூ.8 லட்சத்திற்கும் குறைவாக உள்ளவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு வைத்திருக்கும் பெண்கள், இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
யாருக்கு நிதியுதவி கிடையாது?: மத்திய அரசு, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நிரந்தர பணியில் இருக்கும் பெண்கள். ஏற்கனவே மகப்பேறு சலுகைகளைப் பெற்ற பெண்கள் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.
எப்படி விண்ணப்பிப்பது?: முதலில் PMMVY திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். "சிட்டிசன் லாகின்" என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் மொபைல் நம்பரை வழங்க வேண்டும். பின்னர் அதற்கு ஒரு ஓடிபி வரும். அந்த otp-யை என்டர் செய்யவும்.
உங்களுடைய பெயர், மாநிலம், மாவட்டம், வட்டாரம் மற்றும் பிற தேவையான விபரங்களை வழங்கி ஒரு அக்கவுண்ட்டை உருவாக்க வேண்டும். உள்நுழைந்த பிறகு "பெனீபீஷியரி ரிஜிஸ்ட்ரேஷன்" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். கேட்கப்பட்ட அனைத்து தனிப்பட்ட விவரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும். உங்களுக்கு இது முதல் குழந்தையா அல்லது இரண்டாவது குழந்தையா என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
படிவத்தை பூர்த்தி செய்து அதை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கு ஆதார் கார்டு, ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு விவரங்கள், RCH ஐடி, தகுதி சான்றிதழ் உங்களுடைய கர்ப்ப காலம் தொடர்பான தகவல்கள் தேவைப்படும்.


Click it and Unblock the Notifications