ரஷ்யா உக்ரைன் போர் மற்றும் சீனாவில் கொரோனா தொற்று ஆகியவற்றின் மூலம் உற்பத்திக்கான பல மூலப்பொருட்களின் விநியோகம் தடைப்பெற்றது மட்டும் அல்லாமல் அதிகப்படியான டிமாண்ட் காரணமாக விலையும் அதிகரித்தது.
இதேபோல் கச்சா எண்ணெய் விலையும் தாறுமாறாக அதிகரித்துள்ள காரணத்தால் உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளின் விலையை அதிகரிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
உற்பத்தி நிறுவனங்கள்
இந்திய உற்பத்தி நிறுவனங்கள் விலை உயர்வைச் சமாளிக்கப் பொருட்களின் விலையில் இருந்த இடைவெளி முழுமையாகத் தீர்ந்துள்ள காரணத்தால், தற்போது தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வரும் பொருட்களின் விலையை உயர்த்தியாக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளது.
மூலப்பொருட்கள்
மூலப்பொருட்களின் விலை உயர்வைச் சமாளிக்க வேண்டும் என்பதற்காக விலை உயர்வின் தாக்கத்தை வாடிக்கையாளர்களிடம் சேர்க்கும் நிலைக்கு இந்திய நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளது, இந்திய வர்த்தகச் சந்தைக்குப் புதிய பாதிப்பு உருவாகியுள்ளது.
சங்கிலி தொடர் பாதிப்பு
இந்த விலை உயர்வின் மூலம் சந்தையில் வர்த்தகம் குறைவது மட்டும் அல்லாமல் சங்கிலி தொடர் பாதிப்பாக உற்பத்தி, வேலைவாய்ப்பு, வருமானம், முதலீட்டுச் சந்தை எனப் பல வகையில் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக ஆட்டோமொபைல், கட்டுமான துறை, நுகர்வோர் எனப் பல துறையில் விலை உயரும் காரணத்தால் இந்தியாவின் ஒட்டுமொத்த நுகர்வும் குறைய வாய்ப்பு உள்ளது.
முன்னணி நிறுவனங்கள்
இந்தியாவில் இயங்கி வரும் வெளிநாட்டு நிறுவனங்களான யூனிலீவர், சுசூகி முதல் இந்திய நிறுவனமான JSW ஸ்டீல், ஏசியன் பெயின்ட்ஸ் உட்படப் பல பார்மா நிறுவனங்கள் என அனைத்தும் தனது தயாரிப்புகளின் விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.
எரிபொருள் விலை
இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக எரிபொருள் விலை உயர்வு விளங்குகிறது. உற்பத்தியில் துவங்கி போக்குவரத்து வரையில் பல இடத்தில் பெட்ரோல், டீசல் பெரும் பங்கு வகிக்கும் காரணத்தால், தற்போது பொருட்களின் விலை உயரும் நிலை உருவாகியுள்ளது.
சாமானிய நடுத்தர மக்கள்
அனைத்திலும் முக்கியமாக இந்த விலை உயர்வு உணவுப் பொருட்கள், காய்கறி, பழங்கள் என மக்கள் தினமும் அத்தியாவசியமாகப் பயன்படுத்தும் அனைத்து பொருட்களின் விலையும் உயர உள்ளது. இதன் மூலம் சாமானிய நடுத்தர மக்கள் முதல் அனைத்து தரப்பினரையும் பாதிக்கும்.


Click it and Unblock the Notifications