இந்தியாவில் சமானிய மக்களின் அடிப்படை உணவுகளில் முக்கிய அங்கமாக இருக்கும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தின் விலை கடந்த ஒரு வருடத்தில் மிகப்பெரிய அளவில் உயர்ந்து ஏழை எளிய மக்கள் வாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள் படி உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் மட்டும் அல்லாமல் கோதுமை தவிரப் பிற அனைத்து அடிப்படை உணவுப் பொருட்களின் சராசரி ரீடைல் விலை கடந்த ஒரு வருடத்தில் பெரிய அளவிலான உயர்வைச் சந்தித்துள்ளது.
இந்தியாவில் தற்போது நிலவும் அதிகப்படியான உணவு பணவீக்கம் அரசு கொள்கையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. மேலும் சந்தை வல்லுனர்கள் அடிப்படை உணவுப் பொருட்கள் மீதான விலை உயர்வு தற்காலிகமானது தான், உற்பத்தி மற்றும் விநியோகம் சீராகும் போது விலைவாசி குறைந்து விடும் எனத் தெரிவித்துள்ளனர்.
உருளைகிழக்கு மற்றும் வெங்காயம்
மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பொருட்களின் விலைவாசி தரவுகள் படி உருளைக்கிழங்கின் சராசரி மொத்த விலை கடந்த ஒரு வருடத்தில் 92 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது. இக்காலகட்டத்தில் ஒரு குவின்டால் உருளைக்கிழங்கின் விலை 1,739 ரூபாயில் இருந்து 3,633 ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும் கடந்த 5 வருடத்தில் உருளைக்கிழங்கின் சராசரி விலை அளவீட்டை ஒப்பிட்டாலும் இதன் விலை 158 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 5 வருடத்தில் ஒரு கிலோ உருளைக்கிழங்கு விலை 16.7 ரூபாயில் இருந்து 43 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
வெங்காயம்
இதேபோல் வெங்காயத்தின் விலை கடந்த ஒரு வருட காலத்தில் சராசரியாக 47 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. அடிப்படை உணவுப் பொருட்கள் பட்டியலில் அதிகப்படியான விலை உயர்வு அடைந்ததும் இந்த 2 பொருட்கள் தான்.
சனிக்கிழமை ஒரு குவின்டால் வெங்காயம் 1,739 ரூபாயில் இருந்து 5,645 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் சில இடத்தில் ஒரு கிலோ வெங்காயம் கொடுத்தால் சிக்கன் பிரியாணி இலவசம் என்று கூட விளம்பரம் செய்யப்படும் அளவிற்குச் சந்தையில் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது.
பருப்பு வகைகள்
மேலும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தைத் தாண்டி பருப்பு வகைகளின் விலையும் கடந்த ஒரு வருடத்தில் அதிகளவிலான உயர்வைச் சந்தித்துள்ளது. இந்திய குடும்பங்களில் பருப்பு வகைகள் அடிப்படை உணவுகளில் இருப்பதால் மக்கள் விலைவாசி உயர்வால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இதேபோல் கடந்த ஒரு வருடத்தில் காய்கறி, மாமிசம், மீன் ஆகியவற்றின் விலையும் உயர்ந்துள்ளதை அரசு தரவுகள் காட்டுகிறது.
மத்திய அரசு
இந்தக் கடுமையான விலைவாசியைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தைச் சேமிக்கும் அளவீட்டை கிடங்குகளுக்குக் குறைக்க ஆலோசனை செய்து வருகிறது.
மேலும் விலைவாசியை உடனடியாகக் குறைக்க மத்திய அரசு பூட்டான் நாட்டில் இருந்து உணவு பொருட்களை இறக்குமதி செய்ய விதிகளில் தளர்வு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.