டெல்லி: முகேஷ் அம்பானி, அதானி, ரத்தன் டாடா உள்ளிட்ட பல தொழிலதிபர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாதாளம் நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், அதை எப்படி மீட்கலாம், மேலும் ஆயிரக்கணக்கானோர் தங்களது வேலையினை இழந்து வரும் நிலையில் இதை எப்படி தடுப்பது?
மேலும் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கம் பற்றி ஆலோசனைகள் இக்கூட்டத்தில் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
தொழிலதிபர்களுடன் பிரதமர் ஆலோசனை
மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் சில மோசடி நிறுவனங்கள் மீது மத்திய அரசு எடுக்கும் கடும் நடவடிக்கையை தொழில் துறையினருக்கு எதிரானதாக பார்க்க கூடாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாராம். மேலும் பிப்ரவரி 1 அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் பட்ஜெட்டில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நாட்டின் முன்னணி கார்ப்பரேட் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.
யார் யார் கலந்து கொண்டனர்?
முன்னணி தொழில் அதிபரும் பில்லியனருமான ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, டாடா குழுமத்தை சேர்ந்த ரத்தன் டாடா, ஏர்டெல் நிறுவனத்தின் சுனில் மிட்டல், தொழிலதிபர்கள் கவுதம் அதானி, ஆனந்த் மகேந்திரா, இவர்கள் தவிர டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன், டி.வி.எஸ். குழும தலைவர் வேணு சீனிவாசன் ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
என்ன சொன்னார் மோடி?
தொழிலதிபர்களுடனான கூட்டத்திற்கு பிறகு கிர்லோஸ்கர் நிறுவனத்தின் நுாற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, கடந்த ஐந்து ஆண்டுகளில் வரி வசூல் நடைமுறைகளில் வெளிப்படை தன்மையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் எந்த வித அச்சமும் இன்றி தைரியமாக வெளிப்படையாக சொத்துக்களை சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் சில மோசடி நிறுவனங்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை கார்ப்பரேட் துறைக்கு எதிரான நடவடிக்கையாக தொழில்துறையினர் பார்க்க கூடாது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
கார்ப்பரேட்களுக்கு வரிச்சலுகை
கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜிடிபி குறைந்துள்ள நிலையில், அதை மேம்படுத்தவும் உற்பத்தி துறையை ஊக்குவிக்கவும், மத்திய அரசு கடந்த செப்டம்பரில் கார்ப்பரேட் வரி குறைப்பை செய்தது. ஆக இதன் மூலம் பொருளாதார வளர்ச்சியில் மாற்றத்தை காண முடியும் என்று அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கார்ப்பரேட் துறையினருடனான சந்திப்பு மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
எப்படியோங்க நாட்டுக்கு நல்லது நடந்தால் சரிதானே.