இந்தியா முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை படிப் படியாகக் குறைந்து வரும் நிலையில், மக்களுக்கு வேக்சின் உடனடியாக அளிக்கப்பட வேண்டிய நெருக்கடி உருவாகியுள்ளது. ஆனால் மாநில அரசுகள் நேரடியாக வேக்சின் தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து வேக்சின் பெற முடியாத காரணத்தால் பல பிரச்சனைகள் இருந்தது.
இந்நிலையில் இன்று பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசியைக் கொள்முதல் செய்யும் மொத்த பொறுப்பை மத்திய அரசே ஏற்கும் என்றும் வரும் 21 ஆம் தேதி முதல் மாநிலங்களுக்கு மத்திய அரசுக்குத் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கும் எனப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் அறிவிப்பு
பிரதமர் மோடியின் அறிவிப்பின் மூலம் இனி இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி கிடைக்கும். மேலும் மாநில அரசுகள் இனி தனியாக வேக்சினுக்காகச் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை என்று அறிவித்துள்ளார் மோடி.
தனியார் மருத்துவமனைகள்
இதேவேளையில் தனியார் மருத்துவமனைகள் மொத்த வேக்சின் உற்பத்தியில் 25 சதவீத வேக்சினை வாங்கிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதுமட்டும் அல்லாமல் வேக்சின் விலையைத் தாண்டி 150 ரூபாய் மட்டுமே கூடுதலாகப் பெற வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் விதித்துள்ளது மோடி தலைமையிலான மத்திய அரசு.
மாநில அரசுகள் கண்காணிப்பு
இந்தக் கட்டண வசூல் அளவீட்டை மாநில அரசுகள் தான் கண்காணித்து கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் எனவும் மோடி இன்றைய உரையில் கேட்டுக்கொண்டு உள்ளார். இதனால் தனியார் மருத்துவமனைகள் இனி அதிகளவிலான கட்டணத்தை வசூலிக்க முடியாத நிலையில் உள்ளது.
வேக்சின் கொள்முதல் கொள்கை
மத்திய அரசின் வேக்சின் கொள்முதல் கொள்கையில், முதலில் மொத்த வேக்சின் உற்பத்தியில் மத்திய அரசு 50%, மாநில அரசு 25%, தனியார் மருத்துவமனைகள் 25% அளவீட்டில் பெற்றுக்கொள்ள முடியும்.
வேக்சினுக்காகப் பெறும் தொகை
தற்போது மத்திய அரசின் கொள்முதல் அளவீடு 75 சதவீதமாக உயர்ந்திருந்தாலும், தனியார் மருத்துவமனைகள் 25% அளவீட்டில் எவ்விதமான மாற்றமும் இல்லை. இந்த வேளையில் தனியார் மருத்துவமனை வேக்சினுக்காகப் பெறும் தொகையைக் கட்டாயம் கட்டுப்படுத்த வேண்டும்.
அதிகக் கட்டணம்
இந்தியாவில் பல தனியார் மருத்துவமனைகள் வேக்சின் பற்றாக்குறையை உணர்ந்து கொரோனா தடுப்பு மருந்து பெற வரும் மக்களிடம் அதிகப்படியான கட்டணத்தைப் பெற்று வருகிறது, பெரு நகரங்களில் இருக்கும் சில மருத்துவமனைகள் இரண்டு மடங்கு அதிகத் தொகையை வசூலிக்கிறது. இது கொரோனா பயத்தில் இருக்கும் மக்களைப் பெரிய அளவில் பாதித்து வருகிறது.
150 ரூபாய் மட்டுமே சேவை கட்டணம்
இந்நிலையில் இன்று பிரதமரின் அறிவிப்பின் படி 25 சதவீத வேக்சின் கொள்முதல் சக்தி கொண்ட தனியார் மருத்துவமனைகள் வேக்சின் அடிப்படை தொகை உடன் அதிகப்படியாகக் கூடுதல் சேவை கட்டணமாக 150 ரூபாய் மட்டுமே வசூலிக்க முடியும். இந்த உத்தரவின் மூலம் வேக்சின் வாயிலாக மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு மோடி செக் வைத்துள்ளார்.