மத்திய அரசு ஒரு சில பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க முயற்சிகள் எடுத்து வருவதற்கே எதிர்க்கட்சிகள் மற்றும் வங்கி ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஒரு சில பொருளாதார நிபுணர்கள் எஸ்பிஐ தவிர மற்ற அனைத்து பொதுத்துறை வங்கிகளையும் தனியார் மயமாக்கி விடலாம் என்று கூறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் அனைத்து வங்கிகளையும் தனியார்மயமாக்கினால் வங்கிகள் லாபத்தில் இயங்கினாலும் சில ஆபத்துகள் இருக்கின்றன என்று வங்கியில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அது குறித்து தற்போது பார்ப்போம்.
அனைத்து வங்கிகளும் தனியார்மயம்?
என்சிஏஇஆர் இயக்குநர் ஜெனரல், பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழுவின் உறுப்பினருமான பூனம் குப்தா மற்றும் நிதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவரும், கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியருமான அரவிந்த் பனகாரியா ஆகியோர் பாரத ஸ்டேட் வங்கி தவிர மற்ற அனைத்து பொதுத்துறை வங்கிகளையும் தனியார்மயமாக்க பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.
பொருளாதார வல்லுனர்களின் பரிந்துரை
அனைத்து பொதுத்துறை வங்கிகளையும் தனியார்மயமாக்க வேண்டும் என்றும், பாரத ஸ்டேட் வங்கி மட்டுமே அதன் சிறந்த செயல்பாட்டின் காரணமாக, அரசு உரிமையின் கீழ் இருக்க வேண்டும் என்றும் செல்வாக்கு மிக்க பொருளாதார வல்லுனர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
பொதுத்துறை வங்கியின் பங்குகள்
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயம் ஆக்க வேண்டாம் என்பதுதான் எங்கள் கொள்கையாக இருந்தாலும், இந்தியப் பொருளாதார கட்டமைப்பு மற்றும் அரசியல் நெறிமுறைகள் ஆகியவை காரணமாக எந்தவொரு முதலீட்டாளரின் போர்ட்ஃபோலியோவிலும் பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் இல்லை என்பதே கசப்பான உண்மை. பொதுத்துறை வங்கிகள் செயல் இழந்து வருவதை கருத்தில் கொண்டு, வெளிப்படையாக கூறப்பட்டாலும் மறைமுகமாக எஸ்பிஐயை தவிர மற்ற அனைத்து பொதுத்துறை வங்கிகளையும் தனியார்மயமாக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம் என்று கூறியுள்ளனர்.
ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள்
வங்கித் துறையின் பெரும்பகுதி தனியார் துறைக்கு நகர்வதால், ரிசர்வ் வங்கியும் அதன் செயல்முறைகள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை ஒழுங்குபடுத்தும் அழுத்தத்தை உணரும் என்று அவர்கள் கூறினர். ஏனெனில் வங்கித் துறையில் ஐந்தில் மூன்று பங்கு அதன் ஒழுங்குமுறை வரம்பிற்கு வெளியே உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தனியார்மயமாக்கினால் ஏற்படும் விளைவுகள்
இதுகுறித்து சமூக வலைத்தள பயனர்கள் மற்றும் முன்னாள் வங்கி ஊழியர்கள் கூறும்போது, 'அனைத்து வங்கிகளையும் முழுவதுமாக தனியார்மயமாக்க வேண்டும் என்று பரிந்துரைக்கும் நபர்கள், இந்த நாட்டின் வங்கி வரலாற்றைப் பார்க்கத் தவறிவிட்டனர். 1969ஆம் ஆண்டு 14 வங்கிகளை அரசாங்கம் கையகப்படுத்திய பிறகு வங்கிகளின் ஊடுருவலில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது.
அரசு வங்கிகளுக்கு மட்டுமே சாத்தியம்
ஒரு வங்கி வெகுஜன வங்கியாக செயல்படுவதில் அரசாங்க வங்கிகள் மூலம் மட்டுமே சாத்தியம். விவசாயம் மற்றும் சிறுதொழில்களுக்கு உதவும் வகையில் அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் அரசு வங்கிகள் மட்டுமே முன்னணியில் இருந்தன. சமீபத்திய அரசின் முயற்சியான பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா கணக்கை திறப்பதில் அரசுடைமை வங்கிகளின் மகத்தான பங்களிப்பின் விளைவாக 42 கோடி சாதாரண மக்கள் வங்கி கணக்குகளை தொடங்கியுள்ளனர் என்று கூறியுள்ளனர்.
பேரழிவை ஏற்படுத்தும்
அரசு வங்கிகளினால் மட்டுமே க்ளாஸ் பேங்கிங்கிலிருந்து மாஸ் பேங்கிங்கிற்கு மாறுவது சாத்தியமானது. அனைத்து வங்கிகளையும் தனியார்மயமாக்கும் எந்த முயற்சியும் பேரழிவை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் மேலும் கூறியுள்ளனர். ஏனெனில் லாபம் ஈட்டுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு தான் தனியார் வங்கிகள் இயங்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
டெபாசிட் பணம் இழப்பு
1935ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி உருவான பிறகு, சுதந்திரம் பெறும் வரை நம் நாட்டில் 900 வங்கிகள் தோல்வியடைந்துள்ளன. 1947 முதல் 1969 வரை 665 வங்கிகள் தோல்வியடைந்தன. இந்த அனைத்து வங்கிகளிலும் டெபாசிட் செய்தவர்கள் டெபாசிட் செய்த பணத்தை இழந்துள்ளனர்.
வங்கிகள் மீட்பு
1969ஆம் ஆண்டு வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதில் இருந்து 36 வங்கிகள் தோல்வியடைந்தாலும், மற்ற அரசு வங்கிகளுடன் இணைப்பதன் மூலம் இவை மீட்கப்பட்டன. குளோபல் டிரஸ்ட் வங்கி லிமிடெட் போன்ற பெரிய வங்கியும் இதில் அடங்கும். சமீபத்தில், ரிசர்வ் வங்கி, லட்சுமி விலாஸ் வங்கி லிமிடெட் மற்றும் யெஸ் வங்கி லிமிடெட் ஆகியவற்றை மீட்டெடுக்கும் நடவடிக்கையை எடுத்தது.
மக்கள் சேவை
எனவே தனியார் வங்கிகள் லாப நோக்கத்தில் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வரும் நிலையில் சாமானிய மக்களுக்கு லாபத்தை எதிர்நோக்காமல் சேவை செய்ய நிச்சயம் அரசு வங்கிகளும் வேண்டும் என்பதே பலரது கருத்தாக உள்ளது.