டெல்லி: வரலாறு காணாத அளவில் வெங்காயம் விலை அதிகரித்து வரும் நிலையில், அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் வெங்காயம் விலை இன்று வரை குறைந்த பாடாக இல்லை.
அதிலும் சில இடங்களில் வெங்காயத்தின் விலை கிலோவுக்கு 200 ரூபாய்க்கும் மேல் வர்த்தகமாகி வருகிறது. அதிலும் தரம் குறைந்த வெங்காயம் விலை கூட 100 ரூபாய்க்கும் மேல் வர்த்தகமாகி வருகிறது.
இந்த நிலையில் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை மற்றும் வெங்கயாம் விலை ஏற்றம் குறித்து, காங்கிரஸின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி மத்திய அரசினை கடுமையாக சாடியுள்ளார்.
அதிலும் மத்திய அரசு என்ன தூங்கிக் கொண்டிருக்கிறதா? வெங்காயம் விலை 200 ரூபாயை தொட்டுள்ளது. இதே பெட்ரோலின் விலை 75 ரூபாயை தொட்டுள்ளது. சில இடங்களில் வெங்காயம் விலை 200 ரூபாயையும் தாண்டியுள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் வீடுகளில் முக்கியமாக உபயோகப்படுத்தும் காய்கறிகளின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து பிரியங்கா காந்தி வத்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது. பணவீக்கம் பொதுமக்களை தொந்தரவு செய்து வருகிறது. வெங்காயம் பல இடங்களில் 200-னை தாண்டியுள்ளது. பெட்ரோல் விலை உயர்வால் 75-னை தாண்டியுள்ளது. பாஜக அரசு இப்போது தூக்க மனநிலையில் இருப்பதாக தெரிகிறது எனவும் ட்வீட் செய்துள்ளார்.
மேலும் வெங்காயம் 67 ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்பட்டாலும், சந்தைகளில் 130 - 140 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆதீர் ரஞ்சன் சவுத்ரி.
நாட்டின் பல பகுதிகளிலும் பெய்த கனமழையால் வெங்காயம் உற்பத்தி வெகுவாக குறைந்தது. இதனால் சந்தைக்கு வரத்தும் குறைந்தது. இதுபோக தீவிர மழையின் காரணமாக வெங்காயம் அதிகளவில் சேதமாகியுள்ளது. இதனால் தொடர்ந்து வெங்காயம் விலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அரசாங்கம் இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் ஜனவரி முதல் இரண்டாவது வாரத்தில் கிடைக்கலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதுவரை வெங்காயம் விலை குறைய வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.
கடந்த வாரம் முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம், வெங்காயம் விலையேற்றம் குறித்து கடுமையாக அரசை விமர்சித்ததோடு, ஆர்பாட்டத்திலும் ஈடுப்பட்டது குறிப்பிடத்தக்கது.