கொரோனா தொற்று நாட்டு மக்களை மிகவும் மோசமாகப் பாதித்துள்ளது, ஒருபக்கம் வேலைவாய்ப்பு இழப்பு, வருமானம் இழப்பு, மறுபக்கம் கொத்துக்கொத்தாக உயிரிழப்பு. இந்நிலையில் கொரோனா தொற்று மூலம் உயிரிழந்த ஊழியரின் குடும்பத்திற்கு லைப் இன்சூரன்ஸ் அல்லாத 4 பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் 10 லட்சம் ரூபாய் அளவிலான தொகையைக் கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்கான அறிவிப்பைப் பலகட்ட ஆலோசனை மூலம் அனைத்திந்திய ஜெனரல் இன்சூரன்ஸ் ஊழியர்கள் அமைப்பு (GIEAIA) அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு பல குடும்பங்களுக்கு ஆறுதலாக உள்ளது.
10 லட்சம் ரூபாய்
இதுகுறித்து லைப் இன்சூரன்ஸ் அல்லாத 4 இன்சூரன்ஸ் நிறுவனங்களின் ஒன்றான ஓரியென்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா தொற்று மூலம் உயிரை இழந்த ஊழியரின் குடும்பம் அல்லது நாமினிக்கு ரூபாய் 10 லட்சம் தொகையை அளிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.
ஊழியரின் குரூப் மெடிகிளைம் திட்ட
இதுமட்டும் அல்லாமல் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், ஊழியர் / துணைவியர் / குழந்தைகள் மற்றும் பெற்றோர் ஆகியோருக்கான கொரோனா சிகிச்சைக்கு ஊழியரின் குரூப் மெடிகிளைம் திட்டத்தில் கிளைம் செய்யப்பட்ட தொகையைத் தாண்டி செலவு செய்யப்பட்ட தொகையும் திருப்பி அளிக்கப்படும் ஓரியென்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் எனத் தெரிவித்துள்ளது.
ஊழியர்களுக்கு நன்மை
இந்தத் திட்டம் ஏற்கனவே கொரோனா மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் அல்லாமல் இனி வரும் காலத்தில் பாதிக்கப்படுவோருக்கும் பொருந்தும் எனவும் அறிவித்துள்ளது ஓரியென்டல் இன்சூரன்ஸ் நிறுவனம். இந்த அறிவிப்பு அனைத்துத் தரப்பு ஊழியர்களுக்கு நன்மை அளிக்கும்.
4 இன்சூரன்ஸ் நிறுவனங்கள்
லைப் இன்சூரன்ஸ் அல்லாத 4 இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பட்டியலில் ஓரியென்டல் இன்சூரன்ஸ் நிறுவனம், தி நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி, தி நியூ இந்தியா அசூரன்ஸ் கம்பெனி, தி யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ஆகியவை ஆகும். மேலே குறிப்பிட்ட சலுகை 4 நிறுவன ஊழியர்களுக்கும் பொருந்தும்.