மது பிரியர்களின் சொர்க்கமாகக் கருதப்பட்ட புதுச்சேரியில் அரசு வரி வருமானத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக மதுபானம் மீதான வரியைத் தடாலடியாக 20 சதவீதம் உயர்த்தியுள்ளது.
இதனால் அனைத்து மதுபான விலையும் தாறுமாறாக உயர உள்ளது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் கிட்டதட்ட தமிழ்நாட்டின் விலைக்குச் சில ரூபாய் மட்டுமே குறைவாக உள்ளது.
இந்த வரி உயர்வால் மதுபானம் விற்பனை மீதான வருமானம் அதிகரித்தாலும், அதனைச் சார்ந்து இருக்கும் பல பிரிவுகளின் வருமானம் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரி கலால் வரி
புதுச்சேரியில் கலால் வரி மூலம் கிடைக்கும் வருமானம் மிகவும் குறைவாக இருக்கும் காணத்தால், புதுச்சேரி அரசு அனைத்து மதுபானம் மீதான வரியை எவ்விதமான ஏற்ற இறக்கமும் இல்லாமல் 20 சதவீதம் வரையில் உயர்த்தியுள்ளது. இதனால் அனைத்து மதுபான வகைகளும் விலை உயர உள்ளது.
ரூ.250 கோடி வருமானம்
கலால் வரி பிரிவின் துணை கமிஷ்னரான டி சுதாகரன் வெளியிட்ட அறிவிப்பின் படி வியாழக்கிழமை முதல், புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் அனைத்து மதுபானத்தின் மீதான வரியும் 20 சதவீதம் உயர்த்தப்படும் எனத் தெரிவித்தார். இதன் மூலம் வருடம் 250 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற முடியும் எனவும் தெரிவித்தார்.
புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசின் மிக முக்கியமான வருவாய் பிரிவில் கலால் வரி மிக முக்கியமானதாக உள்ளது. இதனால் இதன் மூலம் கூடுதலான வருவாய் ஈட்டும் பணிகளைத் தற்போது புதுச்சேரி அரசு எடுத்துள்ளது.
மதுபானம் மீது வரி
மேலும் கொரோனா காலத்தில் மதுபானம் மீது விதிக்கப்பட்டு இருந்து 7.5 சிறப்புக் கொரோனா வரியை ஏப்ரல் மாதம் நீக்கிய நிலையில் தற்போது புதிதாக 20 வரி விதிக்கப்பட்டு உள்ளது. இந்த வரி உயர்வால் புதுச்சேரி வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை நீண்ட கால அடிப்படையில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.