தனியார் வங்கிகள் ஆக இருந்தாலும் சரி, பொதுத்துறை வங்கிகள் ஆக இருந்தாலும் சரி வங்கிகளுக்கு பெரும் பிரச்சனையாக இருப்பது வாராக்கடன்கள் தான்.
வாராக்கடன்கள் காரணமாக வங்கிகள் தங்களது லாபத்தை இழப்பது மட்டுமின்றி நஷ்டத்தையும் அடைகின்றன. எனவே ஒவ்வொரு வங்கியும் வாராக்கடன்களை குறைப்பதில் தீவிரம் காட்ட வேண்டும் என ஏற்கனவே ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் தற்போது பஞ்சாப் & சிந்து வங்கி வாராக்கடன்களுக்கு எதிரான போரை அறிவித்துள்ளதாக அவ்வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார்
பஞ்சாப் & சிந்து வங்கி
பஞ்சாப் & சிந்த் வங்கியின் கவனம் அதன் வாராக்கடன்களை குறைப்பது மற்றும் 2023ஆம் நிதியாண்டின் இறுதிக்குள் வாராக்கடன்களே இல்லாத அளவிற்கு வங்கியின் தரத்தை உறுதி செய்வதற்காக நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று அவ்வங்கியின் நிர்வாக இயக்குனர் ஸ்வரூப் குமார் சாஹா தெரிவித்தார்.
வாராக்கடன்களுக்கு எதிரான போர்
வாராக்கடன்களுக்கு எதிராக நாங்கள் போரை அறிவித்துள்ளோம் என்றும், வங்கியின் சறுக்கலை குறைப்பதை நோக்கமாக கொண்டுள்ளோம் என்றும் சமீபத்தில் பொறுப்பேற்ற பஞ்சாப் & சிந்து வங்கியின் நிர்வாக இயக்குனர் ஸ்வரூப் குமார் சாஹா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நாங்கள் தீவிரமான மீட்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதால் இந்த நிதியாண்டில் 25 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள கடன்களை திரும்ப பெறுவோம் என எதிர்பார்க்கிறோம்' என்றும் கூறினார்.
11.34 சதவீத வாராக்கடன்கள்
ஜூன் காலாண்டில் வங்கியின் மொத்த வாராக்கடன்கள் 11.34 சதவீதமாக இருந்தது என்றும் இது மற்ற வங்கிகளுடன் ஒப்பிடுகையில் அதிகம் என்றும், ஆனால் அதே நேரத்தில் வங்கி எடுத்து வரும் தீவிர நடவடிக்கை காரணமாக வாராக்கடன்கள் குறைந்து வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
வளர்ச்சி பாதை
கடந்த சில ஆண்டுகளாக வங்கி குறைந்த செயல்திறனாக இருந்த நிலையில் தற்போது வங்கியை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்கிறோம் என்றும், சில்லறை வணிகம், விவசாயம் மற்றும் சிறு மற்றும் நடுத்தர வணிக கடன்களில் கவனம் செலுத்துவதன் மூலம் கடன் வளர்ச்சியை மேம்படுத்தி வருகிறோம் என்றும் ஸ்வரூப் குமார் சாஹா கூறினார்.
பெருநிறுவனங்களுக்கு கடன்
ஒட்டுமொத்தமாக 2023ஆம் நிதியாண்டில் கடன் வளர்ச்சி 15 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். முன்னதாக எங்கள் நிறுவன கடன் வெளிப்பாட்டை குறைக்க ஒரு உணர்வுபூர்வமான முடிவு எடுக்கப்பட்டதால் சரிவுக்கு வழிவகுத்தது என்றும், ஆனால் இப்போது பெருநிறுவனங்களுக்கு அதிக கடன்களை அளிப்பதில் கவனம் செலுத்துகிறோம்' என்றும் அவர் கூறினார்.
வங்கியின் டெபாசிட்கள்
ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் வங்கியின் மொத்த டெபாசிட் 7 சதவிகிதம் அதிகரித்தது. இது கடந்த காலாண்டை ஒப்பிடும்போது 3 சதவிகிதம் டெபாசிட்கள் மட்டுமே அதிகம். எனவே டெபாசிட் வளர்ச்சியை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் வரும் வாரங்களில் டெபாசிட்களின் விகிதங்கள் மேலும் அதிகரிக்கலாம் என்றும் ஸ்வரூப் குமார் சாஹா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications