உலக வங்கி பல்வேறு நாடுகளுக்கும் சில நாடுகளில் உள்ள மாநிலங்களுக்கும் கடன் வழங்கி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்திற்கு 150 மில்லியன் அமெரிக்க டாலர் உலக வங்கி கடன் வழங்கி உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் ஒரு சில மாதங்களுக்கு முன் ஆம் ஆத்மி அரசு ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் உலகவங்கியின் இந்த கடன் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலக வங்கியின் கடன்
உலக வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் குழு இந்திய மாநிலமான பஞ்சாபிற்கு 150 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் அளித்துள்ளது. இந்த கடன் மூலம் பஞ்சாப் அரசு தனது நிதி ஆதாரங்களை சிறப்பாக நிர்வகிக்கவும் பொது சேவைகளை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
பஞ்சாப் வளர்ச்சி
இதுகுறித்து சர்வதேச நிதி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு அரசு துறைகளின் திறன்களை வலுப்படுத்துவதற்கும், நிதி அபாயங்களை நிர்வகிப்பதற்கும், நிலையான வளர்ச்சியை ஏற்படுத்தவும் இந்த கடன் உதவிகரமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
நிதி சவால்கள்
பஞ்சாப் மாநிலம் தற்போது கடும் நிதி சவால்களை சந்தித்து வருவதால் அம்மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மாநிலத்தின் பொருளாதார பற்றாக்குறையை உலக வங்கியின் இந்த கடன் பூர்த்தி செய்யும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புதிய திட்டங்கள்
உலக வங்கியின் கடன் உறுதி செய்யப்பட்டுள்ளதால் பஞ்சாப் மாநிலத்தின் புதிய திட்டங்கள் திட்டமிடல், பட்ஜெட் மற்றும் கண்காணிப்பு செயல்பாடுகளை வலுப்படுத்த முடியும். மேலும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் மூலமும் மாநிலத்தின் இலக்குகளை அடைய முடியும் என்று கூறப்படுகிறது.
பொதுசேவை
நல்ல தரமான பொது சேவைகளை வழங்குவதற்கான மாநிலத்தின் முயற்சியில் உலக வங்கி பஞ்சாப் மாநிலத்தின் பங்காளியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறது என்றும், இந்த கடன் சரியான நேரத்தில் கிடைத்துள்ளது என்றும் உலக வங்கியின் பணிபுரியும் அகஸ்டே டானோ அவர்கள் தெரிவித்துள்ளார்.
நீர் விநியோகம்
பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் மற்றும் லூதியானா நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் 24 × 7 நீர் விநியோகத்தை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், உலக வங்கியின் கடனால் மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் நீர் விநியோக முறைகளை மேம்படுத்துவதோடு நீர் கசிவை குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.
செயல்திறன்
உலக வங்கி பணிக்குழு தலைவரான துருவ் சர்மா இதுகுறித்து கூறியபோது, 'பஞ்சாப் மாநிலம் பொது வளங்களை நிர்வகிப்பதில் சிறப்பாக செயல்படுகிறது என்றும், உலக வங்கியின் உதவியால் செயல்திறன் மேலும் மேம்படும் என்று தெரிவித்துள்ளார்.