நாட்டில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் வேலையின்மை, வேலையிழப்பு என்பது மிக மோசமாக அதிகரித்து வருகின்றது.
இப்படியொரு நெருக்கடியான நிலையில் இருக்கும் வேலையாவது இருக்குமா? அல்லது இதுவும் பறிபோய்விடுமா? இந்த மாத சம்பளம் வருமா? வராதா? இப்படி பல கேள்விகளுக்கு மத்தியில் சம்பள உயர்வு என்றால் எப்படியிருக்கும்.
ஆனால் இப்படி ஒரு சூப்பரான அறிவிப்பினைத் தான் பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. சரி அப்படி என்னதான் பஞ்சாப் அரசு கூறியது? இதனால் யாருக்கு என்ன பலன் வாருங்கள் பார்க்கலாம்.
சம்பளம் அதிகரிப்பு
பஞ்சாப் அரசின் இந்த அறிவிப்பு செயல்பாட்டிற்கு வந்தால், பல லட்சம் ஊழியர்கள் மிகப்பெரிய அளவில் சம்பள அதிகரிப்பினை பெறுவார்கள் எனலாம். ஏனெனில் பஞ்சாப் மாநிலத்தின் 6வது ஊதியக்குழு, அனைத்து ஊழியர்களின் சம்பளத்தினையும் இரு மடங்கு அதிகப்படுத்த பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம் குறைந்த பட்ச ஊதியம் மாதத்திற்கு 6,950 ரூபாயில் இருந்து 18,000 ரூபாய் வரை உயர்த்தப்படலாம் என தெரிகிறது. கடந்த 2016ல் இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிற சலுகைகள்
இந்த குழுவின் அறிக்கைப்படி தான் இந்த சம்பள உயர்வு அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர இந்த குழுவானது இன்னும் பல சலுகைகளையும் ஊழியர்களுக்காக பரிந்துரை செய்துள்ளது. அரசின் பரிந்துரைப் படி ஊழியர்கள் சம்பளம் சராசரியாக 20% அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது 5வது ஊதியக்குழு பரிந்துரைகளை விட 2.59 மடங்கு அதிகம் என்றும் கூறப்படுகிறது.
ஓய்வூதியம் அதிகரிக்கலாம்
அதோடு மற்ற அனைத்து அலவன்ஸ்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆக இந்த ஊதியக்குழுவின் பரிந்துரைப் படி, சம்பள உயர்வுகளுடன், இன்ட்ய்ஹ அலவன்ஸ்களும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர 2013 முதல் 2017 வரையில் ஓய்வு பெற்றவர்களுக்காக, புதிய ஓய்வூதிய திட்டத்தின் படி ஓய்வூதியம் மற்றும் கிராஜ்விட்டியை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எப்போது அமல்
இது குறித்தான விரிவான அறிக்கையானது பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டு, இந்த ஆண்டு ஜூலை 1 முதல் செயல்படுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தற்போது கொரோனா காரணமாக மோசமான நிதி நிலைமை, வரி வருவாய் சரிவு, ஜிஎஸ்டி இழப்பீடு என பல பிரச்சனைகள் இருக்கும் நிலையில், இது குறித்து விரிவாக ஆராயப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மெடிக்கல் அலவன்ஸ் அதிகரிக்க வேண்டும்
6வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி, மெடிக்கல் அலவன்ஸ் என்பதை ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் மாதத்திற்கு 1,000 ரூபாயாக அதிகரிக்க இந்த கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. அதோடு இறப்பு மற்றும் ஓய்வூதிய கிராஜ்விட்டியின் அதிகபட்ச வரம்பு என்பது 10 லட்சம் முதல் 20 லட்சம் வரையில் அதிகரிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
செலவு அதிகரிக்கும்
அதே போல டிஏ விகிதம் ஏற்கனவே உள்ளதையே தொடரலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிப்படையான, மிக எளிமையான பே முறை பஞ்சாப் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையின் மூலம் அரசுக்கு கூடுதலாக ஆண்டுக்கு 3,500 கோடி ரூபாய் செலவினங்கள் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷன்
வரவிருக்கும் ஜூலை முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் நிவாரணம் காத்துக் கொண்டுள்ளது எனலாம். ஏனெனில் 2021 ஜூலை மாதத்தில் அகவிலைப்படியில் இருந்த முடக்கம் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாத சம்பளத்தில் பெரிய அளவில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி இருப்பினும் இதுவும் நடைமுறைக்கு வந்த பிறகே முழுமையாக தெரியவரும், என்னென்ன சலுகைகள் ஊழியர்களுக்காக காத்துக் கொண்டுள்ளது என.