பஞ்சாப் நேஷனல் பேங்க். இந்த வார்த்தைகளைக் கேட்டதும் நமக்கு நீரவ் மோடியின் நினைவு தான் தன்னிச்சையாக வருகிறது.
சுமாராக 11,350 கோடி ரூபாய் கடன் மோசடி செய்துவிட்டு, இன்று லண்டன் மாநகரத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் நீரவ் மோடி. லண்டன் மாநகர காவலர்களால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது.
அந்த நஷ்டத்தில் இருந்து, இன்றுவரை பஞ்சாப் நேஷனல் பேங்க் மீண்டு வந்ததாகத் தெரியவில்லை. அதற்குள் மற்றொரு பெரிய கம்பெனியின் கடனை, மோசடி என அறிவித்து இருக்கிறது பஞ்சாப் நேஷனல் பேங்க்.
1,203 கோடி கடன்
மத்திய அரசின் கீழ் இயங்கும் பஞ்சாப் நேஷனல் பேங்க், சிண்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Sintex Industries Limited) என்கிற கம்பெனிக்கு கொடுத்து இருக்கும் 1,203.26 கோடி ரூபாயை ‘Borrowing Fraud' என அறிவித்து இருக்கிறது. சிண்டெக்ஸ் கம்பெனியின் கடனை மோசடி என அறிவித்தது குறித்து மத்திய ரிசர்வ் வங்கிக்கும் விவரங்களைச் சொல்லி இருக்கிறார்களாம்.
100 % ப்ரொவிசன்
ஒரு கடன் கணக்கை (Loan Account), மோசடி என அறிவித்துவிட்டால், மீதம் இருக்கும் மொத்த கடன் தொகையையும் ப்ரொவிசன் செய்ய வேண்டும். அதாவது Provision for bad and dountful debts என்கிற பிரிவுக்கு மாற்றிவிட வேண்டும். இதை ஒரே அடியாகவோ அல்லது நான்கு காலாண்டு காலத்துக்குள்ளாகவோ செய்துவிட வேண்டும்.
215.21 கோடி ரூபாய்
ஏற்கனவே பஞ்சாப் நேஷனல் வங்கி, சிண்டெக்ஸ் கம்பெனிக்கு கொடுத்து இருக்கும் கடனில் 215.21 கோடி ரூபாயை ப்ரொவிசன் செய்து இருக்கிறார்களாம். பஞ்சாப் நேஷனல் பேங்க் கொடுத்திருக்கும் கடனில் இன்னும் எத்தனை கோடி ரூபாய் இப்படி சிக்கலில் இருக்கிறதோ, வங்கிக்குத் தான் வெளிச்சம்.
சிண்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
புகழ்பெற்ற சிண்டெக்ஸ் கம்பெனி, பஞ்சாப் நேஷனல் பேங்க் மட்டுமின்றி, பேங்க் ஆஃப் பரோடா, கனரா பேங்க், பஞ்சாப் & சிந்த் பேங்க், பேங்க் ஆஃப் இந்தியா போன்ற வங்கிகளிலும் கடன் வாங்கி இருக்கிறதாம். 31 மார்ச் 2020 நிலவரப்படி சிண்டெக்ஸ் கம்பெனியின் மொத்த கடன் தொகை 7,157.9 கோடியாக இருக்கிறதாம்.
டாமினோ தாக்கம்
ஆக, இப்போது பஞ்சாப் நேஷனல் பேங்க் அறிவித்தது போல, சிண்டெக்ஸ் கம்பெனிக்கு கடன் கொடுத்த மற்ற வங்கிகளும் வரிசையாக கடன் தொகைகளை வெளியிடும் என எதிர்பார்க்கலாம். கொரோனாவால் ஏற்பட்டு இருக்கும் பொருளாதார பிரச்சனைகளால், இன்னும் எத்தனை கம்பெனிகள், இப்படி கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் சிக்கலில் தவிக்கப் போகிறார்களோ தெரியவில்லை.