மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்கு விலையானது கிட்டதட்ட 7 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
ஏன் ஒரே நாளில் 7 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது ஏன்? பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் 3,688 கோடி ரூபாய் கடனை முறைகேடாக பயன்படுத்தியதாக மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இப்படி ஒரு வீழ்ச்சியினை இந்த பங்கு கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதெல்லாம் சரி யார் இவ்வளவு கடனை பெற்றுவிட்டு ஏமாற்றியது? திவான் ஹவுஸிங் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் மோசடி செய்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில் தான், இப்படி மோசமான வீழ்ச்சியினை கண்டுள்ளது இந்த வங்கி பங்கின் விலை.
ஏற்கனவே தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வரும் DHFL நிறுவனம், இந்த முறையும் சர்ச்சனையில் சிக்கி உள்ளது. இதற்கிடையில் தான் பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்கு விலையானது 34.75 ரூபாய் குறைந்து, அதாவது கிட்டதட்ட 6.7 சதவிதம் வீழ்ச்சி கண்டும் காணப்படுகிறது. இது முந்தைய நாள் முடிவு விலையில் இருந்து இந்தளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில், 3,688.58 கோடி ரூபாய் மதிப்பிலான கடனை பெற்று முறைகேடான முறையில் பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளது. டிஹெச் எஃப் எல் நிறுவனம் போலி நிறுவனத்தின் பெயரில் பல பொதுத்துறை வங்கிகளிலும் கடன் வாங்கியுள்ளதாகவும் ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் இருந்து வரும் நிலையில் தற்போது இந்த புகாரும் வந்துள்ளது.
ஏற்கனவே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இந்தஸிந்த் பேங்க், மற்றும் யூனியன் வங்கிகள் என பலரும் டிஹெச் எஃப் எல் நிறுவனம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கியும் இதன் மீது புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டிஹெச்எஃப்எல் நிறுவனம் ஏற்கனவே பல மோசடிகள் செய்து, பல போலியான கணக்குகள் மூலம், கடன் கொடுத்துள்ளதாகவும், அதிலும் சில கணக்குகள் இறந்தவர்களின் பெயரில் இருந்ததாகவும் முன்னதாக செய்திகள் வெளியாகின, இந்த நிலையில் தற்போது மீண்டும் இப்படி மோசடியில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.