கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்படாத துறைகள் என்றால் டெலிகாம், பார்மா போன்ற சில துறைகளைச் சொல்லலாம். ஆனால் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளைப் பட்டியல் போட்டால் அது நீண்டு கொண்டே போகிறது. அதில் மிகவும் முக்கியமான துறை, பயணிகள் விமான சேவைத் துறை தான்.
இந்தியாவில் இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் தொடங்கி, சர்வதேச அளவில் எல்லா விமான சேவை கம்பெனிகளும் வழக்கம் போல வியாபாரம் செய்ய முடியாமல், போதுமான பயணிகள் இல்லாமல் திண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்.
விமான சேவை கம்பெனிகள், தங்கள் வியாபாரத்தை வழக்கம் போல பார்க்க முடியாததால், தொடர்ந்து லே ஆஃப், சம்பளக் குறைப்பு, ஒப்பந்த ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவது, இருக்கும் ஊழியர்களை விடுப்பில் அனுப்புவது என பல சேமிப்பு நடவடிக்கைகளில் இறங்குகிறார்கள்.
போதாக்குறைக்கு, விமான எரிபொருளான ஏர் டர்பைன் ஃப்யூயல் (Air turbine Fuel) விலையும் அதிகரித்து இருக்கிறது. ஆக, விமான சேவை நிறுவனங்களுக்கு, பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட ரண களமான துறையில் வேலை பார்க்கும், ஊழியர்களின் நிலை மட்டும் எப்படி இருக்கும்..? பாதுகாப்பு இல்லாமல் தானே இருக்கும். அதைத் தான் நிரூபித்து இருக்கிறது ஒரு செய்தி.
ஆஸ்திரேலியாவின் க்வாண்டாஸ் (Qantas) விமான சேவை நிறுவனம், தன் 6,000 ஊழியர்களை லே ஆஃப் செய்து வீட்டுக்கு அனுப்ப இருக்கிறார்களாம். அதே போல 15,000 ஊழியர்களை விடுப்பில் அனுப்ப இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
ஒட்டு மொத்தமாகவே க்வாண்டாஸ் நிறுவனத்தில் 29,000 பேர் தான் வேலை பார்க்கிறார்களாம். அதில் 8,000 ஊழியர்கள் மட்டுமே அடுத்த மாதம் வேலை பார்த்துக் கொண்டிருப்பார்கள் எனவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
க்வாண்டாஸ் நிறுவனத்தின் சர்வதேச வழித் தடங்கள் ஒன்றன் பின் ஒன்றாக திறக்கப்பட்டால், மெல்ல நிறுவனத்தின் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் 21,000 பேரைத் தொடும் எனச் சொல்லி இருக்கிறார் க்வாண்டாஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி அலன் ஜாய்ஸ் (Alan Joyce).
இவ்வளவு பெரிய, 100 ஆண்டு பாரம்பரியம் கொண்ட நிறுவனமே, தன் வியாபாரத்தை தக்க வைத்துக் கொள்ள ஆயிரக் கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறார்கள். இன்னும் இந்த கொரோனா வைரஸ் என்ன மாதிரியான குடைச்சல்களைக் கொடுக்கப் போகிறதோ தெரியவில்லை.