கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் டோஹோவில் உள்ள கத்தார் ஏர்வேஸ் டவரினை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இது சுமார் 125 நாடுகளுக்கு மேல் தனது சேவையினை வழங்கி வருகின்றது. இப்படியொரு மிகப்பெரிய விமான நிறுவனம், தனது மார்ச் காலாண்டுடன் முடிவடைந்த நிதியாண்டில் (2019 - 2020) 1.9 பில்லியன் டாலர்கள் (7 பில்லியன் ரியால்கள்) நஷ்டம் கண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
எனினும் உலகளாவிய வீழ்ச்சிக்கு மத்தியில் இந்த வீழ்ச்சியினை சமாளிக்க, கத்தார் அரசாங்கத்திடம் இருந்து 7.3 பில்லியன் ரியால்களை பெற்றுள்ளதாகவும் இந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
கத்தார் ஏர்வேஸ் நஷ்டம்
கடந்த ஆண்டு 639 மில்லியன் டாலர் இழப்பினை பதிவு செய்தது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக, இதுவரை இல்லாத அளவு கடந்த நிதியாண்டில் பலத்த நஷ்டத்தினைக் கண்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு நிதி முடிவுகளும் அவ்வளவு சாதகமாக இருக்காது என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா மட்டும் காரணம் அல்ல
மேலும் இந்த பலமான நஷ்டத்திற்கு கொரோனா பெருந்தொற்று மட்டும் காரணம் அல்ல. மத்திய கிழக்கில் நடந்து வரும் பிரச்சனையும், இந்த மிகப்பெரிய நஷ்டத்தினை காண ஒரு முக்கிய காரணம் என்றும் அறிக்கைகள் கூறுகின்றன. கத்தார் ஏர்வேஸ் நிறுவனம், ஏர் இத்தாலி நிறுவனத்தில் 49% பங்குகளை வைத்திருக்கிறது. இதுவும் இந்த நிறுவனத்தின் மிகப்பெரிய நஷ்டத்தினை காண வழிவகுத்தது.
நடப்பு ஆண்டில் பாதிப்பு அதிகம்
கொரோனா வைரஸ் பரவல் மார்ச் நடுப்பகுதியில் தான் பரவத் தொடங்கியது. இதனால் மார்ச் நடுப்பகுதியில் இருந்து தான் விமானங்களை பாதிக்கத் தொடங்கியது. இதனால் கடந்த நிதியாண்டில் விமான நிறுவனங்கள் கொரோனாவால் கொஞ்சம் பாதிக்கப்பட்டிருந்தாலும், நடப்பு ஆண்டில் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆக கடந்த ஆண்டை விட, நடப்பு நிதியாண்டில் பாதிப்பு மிக மோசமாக இருக்கும்.
நல்ல விஷயமும் உண்டு
சற்றே எதிர்மறையான தாக்கம் இருந்தபோதிலும், கத்தார் ஏர்வேஸ் ஆண்டறிக்கையில் சில நல்ல எண்களையும் கொண்டுள்ளது. ஏனெனில் மொத்த பயணிகளின் எண்ணிக்கை கிட்டதட்ட 10% அதிகரித்து 32.4 மில்லியன் பயணிகளாக அதிகரித்துள்ளது. பயணிகளின் வருவாயும் 9%க்கும் குறைவாகவே அதிகரித்துள்ளது.
வெற்றி கண்டிருக்கலாம்
பஹ்ரைன், எகிப்து, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றால் வான்வெளியைத் தடுப்பதும், ஏர் இத்தாலி தொடர்பான துரதிஷ்டவசமான சூழ்நிலையும் இல்லாவிட்டால், அது ஒரு நியாயமான வெற்றிகரமான ஆண்டைக் கொண்டிருக்கும் என்று விமான நிறுவனம் நிச்சயம் ஓரளவு வெற்றியினைக் கண்டிருக்கும் என்றும் விமான நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.