தோஹா : கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் சம்பள பாக்கியை கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களைத் தாய் நாட்டிற்குத் திருப்பி அனுப்பி வைத்துள்ளது கத்தார் அரசு.
வளைகுடா நாடுகளில் இருக்கும் நிறுவனங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அல்லது வெளிநாட்டு ஊழியர்களுக்குப் போதுமான வசதிகள் செய்து கொடுக்காமல், ஊதியமும் முழுமையாகக் கொடுக்காமல் இருக்கும் பிரச்சனை பல ஆண்டுகளாக இருந்தாலும், தற்போது பெரிய அளவில் வெடித்துள்ளது.
வளைகுடா நாடுகளில் பணிக்கு சென்ற பல ஆயிரம் பேரின் வாழ்க்கை மேம்பட்டு உள்ளது, ஆனால் அதேநேரம் சிலரின் வாழ்க்கை மோசமாகவும் மாறியுள்ளது.
கால்பந்து உலகக் கோப்பை
நவம்பர் 2022 முதல் நடைபெறவிருக்கும் கால்பந்து உலகக் கோப்பைக்கு முன்னதாக, ஊதியம் வழங்கப்படாததற்கு எதிராகப் போராட்டத்தை நடத்தியதற்காகக் கத்தார் அரசாங்கம் இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அந்நாட்டை வீட்டு வெளியேற்றியுள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது.
கத்தார் நாடு
இந்த மாத தொடக்கத்தில் கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் நடந்த போராட்டத்தில் சுமார் 60-க்கும் அதிகமான தொழிலாளர்கள் ஏழு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்தப் போராட்டத்தில் இந்தியர்கள் மட்டும் அல்லாமல் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இருந்தனர்.
தோஹா
தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் படி தோஹா நகரில் இருக்கும் அல் பண்டரி (Al Bandary) நிறுவனத்திற்கு வெளியே 60 ஊழியர்கள் இணைந்து போக்குவரத்தை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதாக லண்டனைத் தளமாகக் கொண்ட தொழிலாளர் உரிமை பிரச்சார அமைப்பான Equidem தெரிவித்துள்ளது.
போராட்டம்
இந்தப் போராட்டத்தில் இந்தியா, நேபாள், பங்களாதேஷ், எகிப்து, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தோர் ஈடுபட்டு உள்ளனர். மேலும் போக்குவரத்தை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டது கத்தார் நாட்டில் இதுவரையில் நடக்காத அரிதான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
டிபோர்ட்
புலம்பெயர்ந்தோரை முறையற்ற வகையில் நடத்துவதில் கத்தார் அரசாங்கம் கடுமையான எதிர்வினைகளை எதிர்கொண்டு வரும் வேளையில், ஆகஸ்ட் 14 ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சில தொழிலாளர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் அவர்கள் யார்? எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது போன்ற தகவல்களை வெளியிடவில்லை.
கத்தார் அரசு
கத்தார் அரசு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் நடக்கும் இறப்புகளைக் குறைவாகக் கணக்குக் காட்டுகிறது. ஊழியர்களைக் கடுமையான சூழ்நிலைகளில் வைத்துள்ளது, அவர்களுக்குச் சாதகமாக நடவடிக்கை எடுப்பது இல்லை, கத்தார் நிறுவனங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் சரியான முறையில் அளிக்கப்படுவது இல்லை என்பது போன்ற பல குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டது.


Click it and Unblock the Notifications