இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் தலைவர்கள் மத்தியில் நடக்கும் முக்கியமான குவாட் மாநாட்டில் பொருளாதாரம், வர்த்தகம் மேம்பாடுகள் அடிப்படையில் நீண்ட காலத் திட்டங்கள் பலவற்றுக்கு முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தக் குவாட் மாநாட்டில் 5 வருடத்தில் 50 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் முக்கியமான முதலீட்டுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
இத்திட்டம் மூலம் இந்தியாவுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குவாட் அமைப்பு
குவாட் அமைப்பில் இருக்கும் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் மத்தியிலான மாநாட்டில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காகச் சுமார் 50 பில்லியன் டாலர் முதலீடு செய்யத் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
50 பில்லியன் டாலர் முதலீடு
இந்த முதலீட்டின் மூலம் இப்பகுதியின் வர்த்தகம், பொருளாதாரம், போக்குவரத்து ஆகியவற்றுக்கு உறுதியான பலன்களை அளிக்கும் எனக் குவாட் நாடுகள் நம்புகிறது. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா மத்தியிலான வர்த்தகத்தை மேம்படுத்து இந்த முதலீடு முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
சிக்கலான தொழில்நுட்பம்
குவாட் நாடுகள் மத்தியில் தற்போது செமிகண்டக்டர், சப்ளை செயின் மற்றும் சிக்கலான தொழில்நுட்பத்தில் பிரச்சனைகள் இருப்பதை உணர்ந்து நிலையில், இதை விரைவாகச் சரி செய்ய வேண்டும் என்பதற்காகச் சிக்கலான தொழில்நுட்பத்தில் இணைந்து செயல்படப் பொது அறிக்கையும் வெளியிட்டுள்ளது.
5ஜி தொழில்நுட்பம்
மேலும் 5ஜி தொழில்நுட்பத்தைச் சிறப்பான முறையில் பயன்படுத்தவும், நிறுவ வேண்டும் என்பதற்காகவும் கருவிகள் கொள்முதல் முதல் தொழில்நுட்ப உதவிகள் வரையில் அனைத்திலும் இணைந்து செயல்படப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு உள்ளது.
இந்தோ பசிபிக் பகுதி
இதேவேளையில் அமெரிக்கா தலைமையில் இந்தியா உடன் 13 நாடுகள் இணைந்து Indo Pacific Economic Framework (IPEF) என்ற கூட்டமைப்பை இந்தோ பசிபிக் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைப்பதற்காக உருவாக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதை வலுவூட்டும் விதமாகத் தற்போது குவாட் மாநாட்டில் 50 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைச் செய்ய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.