கடந்த சில வருடங்களாக ராதா கிஷன் தமானி, பங்குச் சந்தை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரத் துறையில் இருப்பவர்களால் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வகிறார்.
இந்த ராதா கிஷன் தமானி நடத்தும் ரீடெயில் சாம்ராஜ்யத்தின் பெயர் தான் அவென்யூ சூப்பர் மார்ட். கடையின் பெயர் டிமார்ட். சென்னை, திருச்சி, சேலம் போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மட்டுமே இந்த பெரிய சூப்பர் மார்கெட் இருக்கிறது.
கொரோனா காலத்திலும், இந்த கம்பெனியில் வியாபாரம் களை கட்டும், எப்படியும் இவர்கள் எல்லாம் கூடுதலாக லாபம் சம்பாதிப்பார்கள் என பலரும் எதிர்பார்த்தார்கள்.
முரண்
ஆனால் ராதா கிஷன் தமானி நடத்தும் டி மார்ட் கூட கொரோனா வைரஸ் பிரச்சனையின் தாக்கத்தில் இருந்து தப்பவில்லை என்பதைக் காட்டி இருக்கிறது. அவென்யூ சூப்பர் மார்ட் வெளியிட்ட காலாண்டு முடிவுகளில் கடுமையான லாப சரிவைக் காட்டி இருக்கிறார்கள். வாருங்கள் அவென்யூ சூப்பர் மார்ட்டின் காலாண்டு முடிவுகளை விரிவாகப் பார்ப்போம்.
லாபம் என்ன
அவென்யூ சூப்பர் மார்ட் கம்பெனி, கடந்த ஜூன் 2020 காலாண்டில் வெறும் 40 கோடி ரூபாயைத் தான் லாபமாகக் காட்டி இருக்கிறார்களாம். கடந்த ஜூன் 2019-ல் 323 கோடி ரூபாயை லாபமாகக் காட்டியது குறிப்பிடத்தக்கது. ஆக சுமார் 88 சதவிகிதம் லாபம் சரிந்து இருக்கிறது.
வருவாயும் அடி
அவென்யூ சூப்பர் மார்ட்டின் மொத்த கன்சாலிடேட்டட் வருவாயும் 33.22 சதவிகிதம் சரிந்து இருக்கிறதாம். இந்த ஜூன் காலாண்டில் 3,883 கோடி ரூபாய் ஈட்டி இருக்கிறார்கள். ஆனால் கடந்த ஜூன் 2019 காலாண்டில் 5,815 கோடி ரூபாயை ஈட்டி இருந்தார்கள் என்பதும் இங்கு கவனிக்க வேண்டி இருக்கிறது. வருவாயே அடி வாங்கி இருக்கிறது என்றால், வியாபாரம் குறைவாக நடந்து இருக்கிறது என்று தானே பொருள்?
வியாபாரம் எப்படி
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படாத பகுதிகளில், எங்கு எல்லாம் கடையை இயக்க அனுமதி கொடுத்து இருக்கிறார்களோ, அங்கு எல்லாம் கொரோனா வைரஸ் வருவதற்கு முன், எவ்வளவு வியாபாரம் நடந்ததோ, அதில் சுமாராக 80 சதவிகிதத்துக்கு மேல் வியாபாரம் நடக்கிறதாம். மக்கள் தேவையான பொருட்களை மட்டுமே வாங்குகிறார்களாம். தேவை இல்லாத பொருட்களை சீண்டுவதில்லை என்கிறது டி மார்ட் தரப்பு.
சவால்கள் & சிக்கல்கள்
ஒரு கடையை எத்தனை மணி நேரம் நடத்துவது, எப்படி நடத்துவது போன்ற வழிமுறைகள் நிலையாக இல்லை. ஒவ்வொரு மாநிலத்துக்கு மாநிலம், அல்லது ஒவ்வொரு நகரத்துக்கு நகரம் மாறு பட்டுக் கொண்டு இருக்கிறதாம். இது வியாபாரத்தில் எதிரொலித்துக் கொண்டு இருக்கிறதாம். இந்த சிக்கல்கள் மற்றும் சவால்களை எல்லாம் தாண்டி எப்படி வியாபாரம் செய்து லாபம் ஈட்டப் போகிறார்களோ தெரியவில்லை.
அத்தியாவசியப் பொருட்கள் மட்டும்
இந்தியாவின் சில நகரங்களில், அவென்யூ சூப்பர் மார்ட் கடைகளில் கூட, அதிகாரிகள், வெறும் அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே விற்கச் சொல்கிறார்களாம். எனவே எதிர்காலத்திலும் டிமார்ட்டின் வருவாய் அதிகரிக்குமா என்பது சந்தேகமே என அவென்யூ சூப்பர் மார்ட் தரப்பில் இருந்தே சொல்லி இருக்கிறார்களாம்.