இந்தியாவின் முன்னணி ரீடைல் நிறுவனமான அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்-ன் தலைவர் ராதாகிஷன் தமனி சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் நாட்டில் சுமார் 7 இடங்களில் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளார்.
கொரோனா காலத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ள காரணத்தால் ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களைப் பெறவும், ஆன்லைன் மூலம் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் பணிகளில் தீவிரமாக உள்ளது.
இந்தச் சூழ்நிலையில் 400 கோடி ரூபாய் முதலீடு செய்து சொத்துக்களை வாங்கியுள்ளார் ராதாகிஷன் தமனி.
டிமார்ட் பழக்கம்
டிமார்ட் இந்தியாவில் 11 மாநிலத்திலும், 1 யூனியன் பிரதேசத்திலும் வர்த்தகம் செய்து வருகிறது. பிற ரீடைல் நிறுவனங்களைப் போல் கடைகளை வாடகைக்கும், குத்தகைக்கும் எடுப்பது இல்லை, இதற்கு மாறாகக் கட்டிடம் அல்லது நிலத்தை வாங்கி அதில் வர்த்தகம் செய்யும் வழக்கத்தைக் கொண்டு உள்ளது.
400 கோடி ரூபாய் முதலீடு
இதன் படி டிமார்ட் பிராண்ட்-ன் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் தனது வர்த்தகத்தைப் பெறு நகரங்களில் விரிவாக்கம் செய்யும் பொருட்டு மும்பை, ஹைதராபாத், புனே, பெங்களூர் ஆகிய பகுதிகளில் புதிதாகச் சொத்துக்களை வாங்கியுள்ளது.
கொரோனா தொற்றுக் காலம்
கொரோனா தொற்று காலத்தால் நாட்டின் ரியல் எஸ்டேட் துறையின் வர்த்தகம் மந்தமாக இருக்கும் நிலையில் பல மாநிலங்களில் நிலத்தின் விலை பெரிய அளவில் குறைந்துள்ளது. இதன் காரணமாகக் கடந்த 6 முதல் 9 மாதங்கள் விரையில் திட்டமிட்டு பல இடங்களை வாங்கியுள்ளது டிமார்ட்.
அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் ராதாகிஷன் தமனி
இந்த 400 கோடி ரூபாய்க் கொண்டு மும்பை, ஹைதராபாத், புனே, பெங்களூர் ஆகிய பெரு நகரங்களில் சிறிதும் பெரிதுமாகப் பல இடங்களை வாங்கியுள்ளது. 2002ல் டிமார்ட் பிராண்டில் ரீடைல் வர்த்தகத்தைத் துவங்கிய அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் ராதாகிஷன் தமனி இன்று 234 கிளைகள் உடன் நாடு முழுவதும் வர்த்தகம் செய்து வருகிறார்.