பெண்கள் குழந்தை பேறு விடுமுறை முடிந்த பின்னர் மீண்டும் வேலைக்கு செல்வது என்பது ஒரு சவாலான நிலைமையாக பார்க்கப்படுகிறது.
வேலை மற்றும் குழந்தை ஆகிய இரண்டிலும் சமநிலையுடன் போராடும் தாய்மார்கள் பல்வேறு சவால்களை சந்திப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சாதாரண ஊழியர்கள் முதல் ஒரு நிறுவனத்தின் எம்டி வரை குழந்தை பிறந்த பின்பு அவர்கள் மீண்டும் அலுவலகத்திற்கு திரும்புவது என்பது ஒரு மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
அந்தவகையில் எடெல்வீஸ் (Edelweiss) மேனேஜிங் டைரக்டர் மற்றும் சிஇஓ ராதிகா குப்தா குழந்தை பேறுக்கு பின்னர் அலுவலகம் திரும்பியது குறித்து தனது அனுபவத்தையும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
எடெல்வீஸ் எம்டி ராதிகா குப்தா
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான எடெல்வீஸ் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் மற்றும் சி.இ.ஓ ராதிகா குப்தா, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இதனை அடுத்து குழந்தை பிறந்த ஆறு வாரங்களுக்கு பின்னர் மீண்டும் அலுவலகத்திற்கு தற்போது திரும்பியுள்ளார். அலுவலகம் வந்த முதல் நாளில் வேலை மற்றும் குடும்ப வாழ்க்கையை சமநிலையுடன் போராடும் தாய்மார்களுக்கு அவர் சில ஆலோசனைகளை LinkedIn பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.
வேலை-குழந்தை
எனது 6 வார தாய்மை உணர்வுகளை பதிவு செய்வதில் எனக்கு மிகுந்த சந்தோஷம். எந்த பதவியில் ஒரு பெண் இருந்தாலும் குழந்தை பிறப்பிற்கு பின்னர் வேலைக்கு திரும்புவது என்பது தாய்மார்களுக்கு ஒரு சவாலான வாழ்க்கை என்றுதான் கூறுவேன்.
பணிக்கு திரும்பும் தாய்மார்கள்
வேலை செய்யும் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைந்தபின் எப்போது மீண்டும் வேலைக்கு திரும்ப வேண்டும் என்பது குறித்து ஒரு சரியான கால அளவு இல்லை. ஒரு சிலருக்கு சில வாரங்களும், சிலருக்கு பல மாதங்களும் ஆகலாம். ஒவ்வொரு தாய்மார்களின் உடல் அமைப்பு மற்றும் சூழலை பொறுத்து இது வேறுபட்டதாக இருக்கும். எனவே ஒரு பெண் குழந்தை பெற்ற பின் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் வேலைக்கு திரும்ப வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்யக்கூடாது என்று ராதிகா குப்தா கூறியுள்ளார்.
இரட்டை குழந்தைகள்
தனது வேலை மற்றும் குழந்தை ஆகியவற்றை குறிப்பிட்ட ராதிகா குப்தா, ' நான் வேலை, குழந்தை இரண்டையும் சமமாக நேசிக்கின்றேன். வேலை, குழந்தை ஆகிய இரண்டுமே எனக்கு இரட்டை குழந்தைகள் போன்றது என்று தெரிவித்துள்ளார்.
முழுமை
வேலை, குழந்தை ஆகிய இரண்டுமே எனக்கு மிகப்பெரிய ஆற்றலை தருகிறது என்றும் அவர்கள் என்னை முழுமையாக்கி இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வேலைசெய்யும் தாய்மார்களுக்கு எல்லாவற்றிலும் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் என்றும் எனக்கும் ஒரு சூப்பர் அம்மா என்ற அடையாளத்தை தற்போது இரண்டும் கொடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மன நிம்மதி
'எனக்கும் சில சமயம் குழந்தை, வேலை ஆகிய இரண்டையும் கவனித்து கொள்வதற்கு சிரமமாக இருந்தாலும் கண்டிப்பாக நான் அதை பெரிதுபடுத்த மாட்டேன் என்றும் ஒரு அம்மாவாக நான் எப்படி என்னுடைய கடமையை செய்கிறேனோ, அதேபோல் அலுவலகத்திலும் என்னுடைய வேலையை சரியாக செய்வேன் என்றும் இப்போதைக்கு எனக்கு மன நிம்மதி தரும் வகையில் இரண்டையும் நான் கவனித்துக் கொள்வதால் எனக்கு இது போதும்' என்றும் கூறியுள்ளார்.
வாழ்த்து
ஒரு தாய் மட்டுமே தனது குழந்தை மற்றும் வேலை ஆகிய இரண்டையும் சமமாக நேசிக்க முடியும் என்றும் அவர் இறுதியாக குறிப்பிட்டு தனது அனுபவங்களை பகிர்ந்து உள்ளார். ராதிகா குப்தாவின் LinkedIn பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த பதிவு தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. அவருக்கு ஏராளமானோர் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.